அமெரிக்க அதிபர் தேர்தல்: புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்ற ட்ரம்ப் திட்டம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்ற ட்ரம்ப் திட்டம்
Updated on
1 min read

புளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

எலெக்டோரல் காலேஜ் (வாக்காளர் குழு) பொறுத்தவரையில் ட்ரம்ப முன்னிலை பெற்றுள்ளார். அவருக்கு இதுவரை 246 வாக்காளர் குழு ஆதரவு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் 187 பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அங்கு வெற்றியாளரை தீர்மானிக்கும் பிரதானமாக இருக்கும் 7 மாகாணங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. அதில் இரண்டு மாகாணங்களில் குடியரசுக் கட்சி வென்றுள்ளது. இருப்பினும் வெற்றியாளர் யார் என்பதை உறுதி செய்ய இன்னும் சில மணி நேரம் பிடிக்கும் என அமெரிக்க நாட்டு ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சூழலில் புளோரிடாவில் திரண்டுள்ள தந்து ஆதரவாளர்கள் மத்தியில் பேச ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக வெஸ்ட் பாம் கடற்கரையில் மாநாட்டு மையத்துக்கு அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் படையெடுத்துள்ளனர். இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்பார் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அங்கு குழுமி இருக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தங்களது வெற்றி உறுதியாகி விட்டது என சொல்லி வருகின்றனர். திரும்பிய பக்கம் எல்லாம் ‘ட்ரம்ப்… ட்ரம்ப்..’ என அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். தேர்தலில் யார் வெற்றியாளர் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அந்த மாநாட்டு மையத்தில் உள்ள பெரிய காட்சி திரைகளை அங்குள்ள கண்கள் ஆவலுடன் கவனித்து வருகின்றன. ட்ரம்ப் வெற்றிக் கோட்டை நெருங்கும் போது நள்ளிரவு நேரம் நெருங்கி இருக்கும். அந்த சூழலிலும் அவர் அங்கு வந்து வெற்றி உரை ஆற்றுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

வாஷிங்டனில் உள்ள ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேசுவதாக இருந்தது. இருப்பினும் தற்போது அவர் அதை தவிர்த்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in