Published : 17 Jun 2018 09:39 AM
Last Updated : 17 Jun 2018 09:39 AM

காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டுகிறார் ஹபீஸ் சயீது: வேடிக்கை பார்க்கிறது பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீது ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டி வருகிறார். இதனை அந்த நாட்டு அரசு வேடிக்கை பார்க்கிறது.

ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீதுவை அமெரிக்க அரசு சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. அவரது தலைக்கு ரூ.68 கோடி பரிசுத் தொகையையும் அறிவித்துள்ளது. கடந்த 2008 மும்பை தாக்குதல் வழக்கில் ஹபீஸ் சயீது முக்கிய குற்றவாளியாக உள்ளார். அவரை 10 மாதங்கள் மட்டும் வீட்டுக் காவலில் வைத்திருந்த பாகிஸ்தான் அரசு பின்னர் விடுவித்துவிட்டது. காஷ்மீரில் நாச வேலைகளில் ஈடுபடும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவராகவும் ஹபீஸ் சயீது செயல்படுகிறார். சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக ஜமாத் உத் தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. ஹபீஸ் சயீது சுதந்திரமாக உலவி வருகிறார்.

இந்நிலையில் காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு ஹபீஸ் சயீது ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் சார்பில் லாகூரில் நேற்று ஈகை திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஹபீஸ் சயீது பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரினார்.

காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டி வரும் ஹபீஸ் சயீது மீது பாகிஸ்தான் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது என்று சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x