Published : 09 Aug 2014 12:00 AM
Last Updated : 09 Aug 2014 12:00 AM
கம்போடியாவில் முன்பு சர்வாதிகார ஆட்சி நடத்திய கேமர் ரூஜ் கட்சியின் தலைவர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேமர் ரூஜ் ஆட்சியின்போது இவர்கள் மனித உரிமைகளுக்கு எதிராக கடுமையான குற்றங்களைச் செய்ததற்காக ஐ.நா.வின் கண்காணிப்பில் செயல்பட்ட கம்போடிய நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கம்போடியாவில் சர்வாதிகாரி போல் பாட் தலைமையிலான கேமர் ரூஜ் கட்சி 1975 முதல் 1979 வரை ஆட்சி நடத்தியது. அப்போது சுமார் 15 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
அந்த கொடூர ஆட்சியின் போது முக்கியப் பதவியில் இருந்து நுவான் சே, கீயூ சாம்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நுவான் சேவுக்கு 88 வயதும், கீயூ சாம்பனுக்கு 83 வயதும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நுவான் சே ஆட்சி அதிகாரத்தில் சர்வாதிகாரி போல் பாட்டுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். கீயு அரசுத் தலைவர் என்ற பதவியை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT