Published : 25 Apr 2024 02:30 PM
Last Updated : 25 Apr 2024 02:30 PM

‘காசாவுக்கான எனது ஆதரவில் எந்தவித குழப்பமும் இல்லை’ - மலாலா உறுதி

மலாலா யூசுப்சாய் | கோப்புப்படம்

புதுடெல்லி: காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்துள்ள நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கான தனது ஆதரவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்து தயாரித்த பிராட்வே மியூசிக்கலுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது நிலைப்பாடு குறித்து வியாழக்கிழமை எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காசா மக்களுக்கான எனது ஆதரவில் எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். போர் நிறுத்தம் அவசியம், அவசரம் என்று புரிந்து கொள்வதற்கு இன்னும் அதிகமான இறப்புகள், குண்டு வீசப்பட்ட பள்ளிகள் மற்றும் பசியால் வாடும் குழந்தைகள் அவசியம் இல்லை. சர்வதேச சட்டங்களை மீறியதற்காகாவும், போர் குற்றங்களுக்காகவும் இஸ்ரேலை நான் கண்டிக்கிறேன், தொடர்ந்து கண்டிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

20ம் நூற்றாண்டில் வாக்களிக்கும் உரிமையை சித்தரிக்கும் வகையில் அமெரிக்க பெண்களின் வாக்களிக்கும் உரிமை குறித்து பிரச்சாரம் செய்யும் வகையில் ‘Suffs’ என்ற இசை நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் நியூயார்க்கில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மலாலா யூசுப்சாய், ஹமாஸ்களுக்கான எதிரான இஸ்ரேல் போரை வெளிப்படையாக ஆதரிக்கும் ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்திருப்பதற்கு சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த இணைவு குறித்து பாகிஸ்தானின் பிரபல கட்டுரையாளரான மேகர் தாரா தனது எக்ஸ் பக்கத்தில், “பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டனுடன் மலாலாவின் நாடக ஒத்துழைப்பு, ஒரு மனித உரிமைப் போராளி என்ற அவரது நிலைப்பாட்டில் பெரிய அடியாக உள்ளது. இதை நான் மிகவும் சோகமான விஷயமாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கப்பட்ட "Suffs" பிரீமியர் நிகழ்ச்சிக்கு 26 வயதான மலாலா போர் நிறுத்தத்தை ஆதரிக்கும் வகையில் சிவப்பு மற்றும் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தார் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்திருந்தது.

எழுத்தாளரும் கல்வியாளருமான நிடா கிர்மானி தனது எக்ஸ் பக்கத்தில், “ஹிலாரியுடன் இணைந்து பணியாற்ற மலாலா எடுத்திருக்கும் முடிவு பைத்தியக்காரத்தனமானதாகவும் அதேவேளையில் இதயத்தை உடைப்பதாகவும் இருக்கிறது. என்ன ஒரு ஏமாற்றம்” என்று தெரிவித்துள்ளார்.

ஹமாஸ்களை அகற்றுவதற்கான ராணுவ நடவடிக்கைக்கு வெளிப்படையாக ஆதரவளித்து வரும் ஹிளாரி கிளிண்டன், போர் நிறுத்தத்துக்கான கோரிக்கையையும் நிராகரித்துள்ளார். அதே நேரத்தில் பாலஸ்தீய குடிமக்களுக்கான பாதுக்காப்புக்காகவும் அவர் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் அரசாங்கத்தில் ஹிலாரி கிளிண்டன் உயர்மட்ட அரசு அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அவர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் உள்ள தாலிபான்களின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களை மேற்பார்வையிட்டார். இந்த ட்ரோன் தாக்குதல்களால் மலாலாவின் சொந்த ஊரில் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் ஊனமாகியுள்ளனர்.

தனது இளம்வயதிலேயே பெண் கல்வியை ஆதரித்து பேசிதற்காக பாகிஸ்தான் தாலிபன்களால் கடந்த 2012ம் ஆண்டு மலாலா தலையில் சுடப்பட்டார். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இளம்வயதிலேயே நோபல் பரிசு பெற்ற இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதேபோல் பழமைவாதம் கொண்ட நாட்டில் மேற்கத்திய பெண்ணியம் மற்றும் அரசியல் தாராளமயத்தை புகுத்த முயற்சிப்பதால் பாகிஸ்தானிலும் இவர் சந்தேக கண்கொண்டே பார்க்கப்படுவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x