Published : 15 Apr 2024 10:20 AM
Last Updated : 15 Apr 2024 10:20 AM

சிறைபிடித்த கப்பலில் சிக்கியுள்ளவர்களை சந்திக்க இந்திய பிரதிநிதிக்கு விரைவில் அனுமதி: ஈரான் உறுதி

அமைச்சர் ஜெய்சங்கர் | கோப்புப் படம்.

டெஹ்ரான்: ஈரான் சிறைபிடித்த கப்பலில் சிக்கியுள்ள 17 இந்திய மாலுமிகளை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு விரைவில் அனுமதி அளிப்பதாக ஈரான் உறுதி கூறியுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீராப்தொல்லாயின் இதனை உறுதிப் படுத்தியுள்ளார். முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைபிடிப்பு பின்னணி: கடந்த 1-ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ அதிகாரிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய எம்எஸ்சி ஏரியஸ் என்ற சரக்குக் கப்பலை ஈரானின் கடற்படையான இஸ்லாமிய புரட்சிக் காவல் படை சனிக்கிழமை சிறைபிடித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிகொண்டு அக்கப்பல் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக அந்தக் கப்பலில் தரையிறங்கிய இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர் அந்தக் கப்பலை சிறைபிடித்து ஈரானின் கடற்பரப்புக்குள் கொண்டு சென்றனர். இந்தக் கப்பலில் மொத்தம் 25 மாலுமிகள் இருந்ததாகவும் அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில், சிறையில் உள்ள இந்திய மாலுமிகளை சந்திக்க இந்தியப் பிரதிநிதிக்கு விரைவில் அனுமதி அளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் உறுதி தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு அடுத்த அறிவிப்பு வரும்வரையில் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x