Published : 14 Apr 2024 06:54 PM
Last Updated : 14 Apr 2024 06:54 PM

கனடாவில் காருக்குள் வைத்து இந்திய மாணவர் சுட்டுக் கொலை

ஒட்டவா: கனடா நாட்டில் சிராக் அன்டில் என்ற இந்திய மாணவரை மர்ம நபர்களால் காருக்குள் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டின் தெற்கு வான்கூவர் நகரில், கிழக்கு 55வது அவென்யூவில் ஏப்ரல் 12ம் தேதி இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சோதனையிட்டனர். அதில், 24 வயதான சிராக் அன்டில் என்ற இந்திய மாணவர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ஆடி காருக்குள் உயிரிழந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக வான்கூவர் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஹரியானாவின் சோனிபட் பகுதியைச் சேர்ந்த சிராக் அன்டில் கனடா மேற்கு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து முடித்துள்ள சிராக் அன்டில் கடந்த 2022ம் ஆண்டு, வான்கூவருக்கு சென்றது தெரியவந்துள்ளது.

சிராக் உயிரிழந்தது குறித்து பேசிய அவரது சகோதரர் ரோனித், “அண்ணன் உடன் தினமும் பகலிலும் இரவிலும் பேசுவேன். அவர் இறப்பதற்கு முன்புகூட பேசினேன். மகிழ்ச்சியாகவே பேசினார். அவர் யாருடனும் எந்த பிரச்சனையும் சண்டையும் செய்யமாட்டார். அமைதியான மனிதர் அவர்” என்று தெரிவித்துள்ளார். அவரது உடலை மீட்டு கொண்டுவர இந்திய வெளியுறவுத் துறைக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x