Published : 25 Mar 2024 12:24 PM
Last Updated : 25 Mar 2024 12:24 PM

லண்டன் | சைக்கிளில் வீடு திரும்பிய இந்திய மாணவி லாரி மோதி பலியான சோகம்

லண்டனில் லாரி மோதி உயிரிழந்த இந்திய மாணவி.

புதுடெல்லி: லண்டனில் சைக்கிள் ஓட்டிச் சென்ற 33 வயதான இந்திய மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

33 வயதான இந்திய மாணவி செய்ஸ்தா கோச்சார் (Cheista Kochhar) என்பவர் கடந்த வாரம் தனது வீட்டுக்குச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியதில் பலியானார். அவரது கணவரின் கண்முன்னரே இந்த கோர விபத்து நடந்துள்ளது.

நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், மாணவி செய்ஸ்தா கோச்சார் இறந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில், “செய்ஸ்தா கோச்சார் என்னுடன் நிதி ஆயோக்கின் லைஃப் திட்டத்தில் பணிபுரிந்தார். லண்டனில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கும்போது போக்குவரத்து நெரிசலில் லாரி மோதிய சம்பவத்தில் இறந்துள்ளார். அவர் புத்திசாலி. தைரியமான பெண்ணும்கூட. சீக்கிரம் போய்விட்டார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 19 அன்று, கோச்சார் விபத்தில் சிக்கினார். விபத்து நடந்தபோது அவரது கணவர் பிரசாந்த் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனாலும் கோச்சார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

செய்ஸ்தா கோச்சார், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் நடத்தை அறிவியலில் (Behavioural Science) பிஎச்டி படித்து வந்தார். கடந்த செப்டம்பரில் தான் அவர் லண்டனுக்கு வந்தார். டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் பயின்றார். அவர் 2021-23ல் நிதி ஆயோக்கில் இந்தியாவின் தேசிய நடத்தை நுண்ணறிவு பிரிவில் மூத்த ஆலோசகராக இருந்ததாக அவரது லிங்ட் இன் பயோ தெரிவிக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக தற்போதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், போலீஸார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x