Published : 27 Feb 2018 09:12 AM
Last Updated : 27 Feb 2018 09:12 AM

பிரிட்டனில் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இலங்கை தப்பிவந்த ராணுவ அதிகாரி மீது விசாரணை நடத்த வலியுறுத்தல்

தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு பிரிட்டனில் இருந்து தப்பி இலங்கை வந்த ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ மீது விசாரணை நடத்த வேண்டும் என இலங்கையில் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் 70-வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம், பிரிட்டனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் கடந்த பிப்.4-ம் தேதி நடைபெற்றது. அப்போது, இலங்கை போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பிரிட்டனில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர், தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இலங்கை தூதரக ராணுவ பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னாண்டோ, தமிழர்களை பார்த்து ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என்பதுபோல சைகை காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூதரக அதிகாரிகளுடன் இலங்கை தமிழர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ சைகை காண்பித்த விடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து, அவரை பணி நீக்கம் செய்யக் கோரி பிரிட்டன் அரசுக்கு இலங்கை வம்சாவளி எம்பிக்கள் கடிதம் எழுதினர்.

தொடர்ந்து, ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவை பணியிடை நீக்கம் செய்து, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டதுடன் அவர் மீது துறைரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தது. ஆனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பிரியங்க பெர்னாண்டோவுக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவால் மீண்டும் பணி வழங்கப்பட்ட்டது.

பிரியங்க பெர்னாண்டோவுக்கு மீண்டும் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டது இலங்கை தமிழர்களையும், பிரிட்டனில் வாழும் தமிழர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதனால் பிரிட்டனில் உள்ள இலங்கை வம்சாவளி எம்பிக்களும், அங்குள்ள ஈழத் தமிழர்களும் பிரிட்டன் நீதிமன்றம் மூலம் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அறிந்து கொண்ட பிரியங்க பெர்னாண்டோ பிரிட்டனில் இருந்து தப்பி விமானம் மூலம் 24-ம் தேதி இலங்கை வந்தடைந்தார். தற்போது இலங்கையில் உள்ள பிரியங்க பெர்னாண்டோ மீது அறிவித்தவாறு விசாரணை நடத்த வேண்டும் என இலங்கையில் உள்ள பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x