Published : 16 Feb 2024 04:24 PM
Last Updated : 16 Feb 2024 04:24 PM

காசா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படை - ஆக்சிஜன் துண்டிப்பால் 4 நோயாளிகள் பலி

காசா: இஸ்ரேல் படைகள் தெற்கு காசாவின் பிரதான மருத்துவமனையான நாசர் மருத்துவமனையில் சோதனை நடத்தி வரும் நிலையில், அங்கு மின்சாரம் தடைபட்டிருக்கிறது. இதனால் ஆக்சிஜன் உதவியும் நிறுத்தப்பட்டதால் நான்கு நோயாளிகள் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு காசாவின் பிரதான மருத்துவமனையான கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனைக்குள், ஹமாஸ் அமைப்பு ஊடுருவி உள்ளதாகவும், அங்கு இஸ்ரேல் பிணைக்கைதிகளை மறைத்து வைத்திருப்பதாகவும், இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்பு இதனை மறுத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவப் படையினர் மருத்துவமனைக்குள் புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் கூறும்போது, “மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர்கள் நிறுத்தப்பட்டன, அதோடு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் உதவி துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். தற்போது, நான்கு நோயாளிகள் உயிரிழந்தனர்.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளின் நிலை, மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் நிலை கவலையளிக்கிறது” எனத் தெரிவித்தனர்.

முன்னதாக, மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களும், நோயாளிகளும் வெளியேற தனிப்பாதை ஒன்றை இஸ்ரேல் படைகள் திறந்திருந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 28,775 பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 68,552 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x