

அபுஜா: நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளிக் குழந்தைகளை கடத்திச் சென்றனர். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த அமைப்பினர் பள்ளிகளை குறிவைத்து மாணவர்களை கடத்தினர்.
அதேபோல் தற்போதும் நைஜீரியாவை சேர்ந்த ஒரு கும்பல் பள்ளிக் குழந்தைகளை கடத்திச் செல்லும் சம்பவங்களில் ஈடுபடுகிறது. நைஜீரியாவின் வட பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் இங்குள்ள கிறிஸ்தவ பள்ளிகளை குறிவைத்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தின் மகா நகரில் 25 பள்ளி குழந்தைகள் கடத்தப்பட்டனர். இந்நிலையில் நைஜர் மாநிலத்தில் உள்ள புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து 300-க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும் 12 ஆசிரியர்களும் வனப் பகுதிக்குள் கடத்தி செல்லப்பட்டுள்ளனர் என்று பள்ளி நிர்வாக தலைவர் புலுஸ் தாவா யோகனா தெரிவித்துள்ளார். பள்ளியின் பாதுகாவலரை துப்பாக்கியால் சுட்டு மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. கடத்தப்பட்ட பள்ளிக் குழுந்தைகளை மீட்க நைஜீரிய அரசு சிறப்பு படைகளை அமைத்துள்ளது. இதில் உள்ளூர் வேட்டைக்காரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளை பாதுகாப்பாக மீட்பதில் பள்ளி நிர்வாகமும் இணைந்து பணியாற்றி வருகிறது. குழந்தைகளை மீட்கும் பணியிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என நைஜர் மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பிணைத் தொகைக்காக பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குவாரா மாநிலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது துப்பாக்கி ஏந்திய சிலர் கடந்த திங்கள் கிழமை தாக்குதல் நடத்தி இருவரை சுட்டுக் கொன்றனர். பின்னர் 38 பேரை கடத்திச் சென்றனர். இவர்களை விடுவிக்க ஒவ்வொருவருக்கும், 69,000 அமெரிக்க டாலர் பணம் வேண்டும் என கடத்தல்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.