

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, நியூயார்க் நகர புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக, அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்தார்.
ட்ரம்ப் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, ‘‘மம்தானி உடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நாங்கள் இருவரும் நேசிக்கும் நியூயார்க் நகரம் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பொதுவான ஒரு இலக்கு எங்களிடம் உள்ளது.
நியூயார்க் நகர மக்கள் மிகச் சிறந்த மேயரைப் பெறுவார்கள் என்று நினைக்கிறேன். அவர் சிறப்பாகச் செயல்பட்டால், நான் மகிழ்ச்சி அடைவேன். இதில் கட்சி வேறுபாடு இல்லை என்று நான் சொல்வேன். உண்மையில், அவர் சில பழமைவாதிகளுக்கும், சில தீவிர தாராளவாதிகளுக்கும் கூட ஆச்சரியத்தை அளிப்பார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
அப்போது அதிபர் ட்ரம்ப்பை இன்னும் ‘பாசிஸ்ட்' என கருதுகிறீர்களா என்று மம்தானியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது மம்தானி பதிலளிக்க முற்பட்டார்.
அதற்குள் ட்ரம்ப் குறுக்கிட்டு, “பரவாயில்லை, நீங்கள் ‘ஆம்' என்று மட்டும் சொன்னால் மட்டும் போதும். அதை விளக்குவதைவிட இது எளிது. இதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அதை விட மோசமாக கூட நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்’’ என்றார்.
நியூயார்க் நகர மேயர் தேர்தல் பிரசாரத்தின்போது, அதிபர் ட்ரம்ப்பை ‘பாசிஸ்ட்' என மம்தானியும், மம்தானியை கம்யூனிஸ்ட் என்று ட்ரம்ப்பும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இருந்தபோதும், நியூயார்க் நகர மக்கள் இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானியை மேயராக தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.