Published : 10 Feb 2018 09:08 PM
Last Updated : 10 Feb 2018 09:08 PM

சுதந்திர பாலஸ்தீனம் உதயமாகும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

சுதந்திர பாலஸ்தீனம் விரைவில் உதயமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய 3 நாடுகள் பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். பாலஸ்தீனம் செல்வதற்காக அவர் முதலில் ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அங்கு அந்த நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லாவை சந்தித்துப் பேசினார்.

பின்னர் காலை ஜோர்டான் அரசு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு சென்றார். மோடியின் ஹெலிகாப்டருக்கு இஸ்ரேல் விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக அரணாக சென்றன.

ரமல்லா ஹெலிபேடில் தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்துல்லா வரவேற்றார். அங்கிருந்து பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தின் நினைவிடத்துக்கு சென்ற மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அதிபர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவரை அதிபர் மெஹமூத் அப்பாஸ் வரவேற்றார். பின்னர் அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பாலஸ்தீனத்தின் மிக உயரிய ‘கிராண்ட் காலர் விருதினை’ பிரதமர் மோடிக்கு அதிபர் அப்பாஸ் வழங்கினார். இருதலைவர்களும் சந்தித்துப் பேசிய பிறகு நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

பாலஸ்தீன மக்களின் நலனுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். இந்திய அரசு சார்பில் ரமல்லாவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்கா திறக்கப்படும்போது பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பாலஸ்தீன மக்களின் சுகாதாரம், உள்கட்டமைப்பு, பெண்கள் முன்னேற்ற திட்டங்களில் இந்தியா முதலீடு செய்யும். இந்த பிராந்தியத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். விரைவில் சுதந்திர பாலஸ்தீனம் உருவாகும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீன அதிபர் மெஹமூத் அப்பாஸ் கூறியதாவது: இந்திய, பாலஸ்தீன உறவு நீடித்து நிலைத்திருக்க வேண்டும். கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்துக்கு இந்தியா ஆதரவு அளித்து வருவதற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா சார்பில் பாலஸ்தீனத்தின் பெஸ்ட் சாகரில் ரூ.200 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதவிர தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, கல்வி உட்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பாலஸ்தீன பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி மாலை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபி நகருக்கு சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x