Published : 01 Jan 2024 01:27 PM
Last Updated : 01 Jan 2024 01:27 PM

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு - மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

டோக்கியா: ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 12.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக ஐரோப்பிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “ஜப்பானின் ஹொன்ஷுவின் மேற்குக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.5, 7.5, 6.2 ரிக்டர் என அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேற்குக் கடலோரம் உள்ள அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மட்டுமல்லாது தென் கொரியா, செர்பியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளபோது டெக்டானிக் தகடுகள் ஒன்றோடு மோதாமல் ஒன்றின் மீது ஒன்றாக எழுந்தால் சுனாமி அலைகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 5 முதல் 7 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் உடனடியாக கடற்கரையோரங்களில் இருந்து வெளியேறி மிக உயரமான கட்டிடங்களில் உச்சிக்கு சென்றுவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x