Published : 31 Jan 2018 10:19 AM
Last Updated : 31 Jan 2018 10:19 AM
அமெரிக்காவில் கிரிப்ட்டோ கரன்ஸி பெயரில் ரூ.1 கோடி அளவுக்கு ஆன்லைனில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸிகள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த மெய்நிகர் பணத்தை சில நாடுகள் அங்கீரித்துள்ள போதிலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை. கிரிப்டோகரன்ஸி முறைகள் எந்த அரசையும் சார்ந்து இருப்பதில்லை. இது ஆன்லைனில் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எக்ஸ்பர்ட்டி ஐசிஓ என்ற இ-வாலட் நிறுவனம் ‘எத்திரீயம்’ என்ற கிரிப்டோகரன்ஸியை விற்பனை செய்ய அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஆன்லைன் கரன்ஸியை வாங்க ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.
இதற்கிடையில் எக்ஸ்பர்ட்டி நிறுவனத்தின் தகவல்களை திருடிய ஹேக்கர்கள், அந்த நிறுவனத்தின் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் அனுப்பினர். அதனை நம்பி ‘எத்திரீயம்’ கிரிப்டோகரன்ஸியை வாங்க 71 பேர் முன்பணம் செலுத்தினர்.
அடுத்த நாள் எக்ஸ்பர்ட்டி இ-வாலட் நிறுவனத்தை அவர்கள் தொடர்பு கொண்டு, எப்போது ‘எத்திரீயம்’ கிரிப்டோகரன்ஸி ஒதுக்கப்படும் என்று விவரம் கேட்டனர். “நாங்கள் யாருக்கும் இ-மெயில் அனுப்பவில்லை. ‘எத்திரீயம்’ கிர்போடோகரன்ஸி ஒதுக்கீடு 31-ம் தேதிக்கு பிறகுதான் நடைபெறும்” என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. சுமார் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தை ஹேக்கர்கள் ஆன்லைன் மூலம் அபகரித்துள்ளனர்.
இதனிடையே ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று எக்ஸ்பர்டி நிறுவனம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT