Published : 18 Jan 2018 10:27 AM
Last Updated : 18 Jan 2018 10:27 AM
மியான்மரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி போலீஸ் நிலையத்தின் மீது ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதன்பின் மியான்மர் ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. அதனால் உயிருக்குப் பயந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றனர். சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு அகதிகளாக தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மியான்மர் அரசுக்கும் வங்கதேச அரசுக்கும் கடந்த வாரம் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 2 ஆண்டுகளில் படிப்படியாக ரோஹிங்கியாக்களை மியான்மர் திரும்ப பெற்றுக் கொள்ள அதில் முடிவானது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நோரெட் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று உணரும்போது அவர்களை வலுக்கட்டாயமாக திரும்ப அனுப்புவதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை. அதேவேளையில் தங்கள் நாட்டில் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். அத்துடன் அவர்கள் தாமாகவே தாய்நாடு திரும்ப வேண்டும்’’ என்றார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறும்போது, ‘‘ரோஹிங்கியா முஸ்லிம்கள் தாமாகவே முன்வந்து மியான்மர் திரும்ப வேண்டும். அவர்களுக்குரிய கவுரவம், பாதுகாப்பு கிடைப்பது முக்கியம். ரோஹிங்கியாக்கள் நாடு திரும்பும் நடவடிக்கை முறையாக நடைபெற வேண்டும். அதற்கு என்ன தேவையோ அவற்றை செய்ய ஐ.நா. தயார்’’ என்று வலியுறுத்தினார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT