Published : 17 Nov 2023 12:58 PM
Last Updated : 17 Nov 2023 12:58 PM

“இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பொதுமக்கள் உயிர் சேதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்” - பிரதமர் மோடி

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

டெல்லி: இஸ்ரேல் - ஹமாஸ் போரை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், போரில் பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது குளோபல் சவுத் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து புதிய சவால்கள் உருவாகி வருவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் நாங்கள் நிதானத்தையும் கடைப்பிடித்தோம். போர் குறித்த பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். போர் குறித்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். இந்தியா சார்பில் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் அனுப்பியுள்ளோம். உலகளாவிய நலனுக்காக குளோபல் சவுத் நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம். இதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த மாதம், குளோபல் பார்ட்னர்ஷிப் ஆஃப் ஆர்டிஃபிஷியல் உச்சி மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யும் Global Partnership on Artificial Intelligence (GPAI) " என்றார்.

என்ன நடந்தது: இஸ்ரேல் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் தாக்குதலைத் நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் தொடர்ந்து தன்னுடைய எதிர்த் தாக்குதலை நடந்தி வருகிறது. இந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன.

பாலஸ்தீனத்துக்கு சீனா, ஈரான், சிரியா, லெபனான் முதலான நாடுகளும், இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்திருக்கின்றன.

உலக நாடுகள் இந்தப் போரை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியப் பிரதமர் மோடி, தன்னுடைய எக்ஸ் தளத்தில், “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.எங்கள் பிரார்த்தனைகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகவே இருக்கின்றன. இந்தக் கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்’’ என்று இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார்.

இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேல் ஏறத்தாழ 1,400 பேர் கொல்லப்பட்டனர். 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்றனர். இதனால் இஸ்ரேல் ராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x