Published : 09 Nov 2023 07:50 AM
Last Updated : 09 Nov 2023 07:50 AM
புதுடெல்லி: ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் வீடு திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த தீபாவளிக்கு இந்தியர்கள் விளக்கேற்றி வழிபட வேண்டும் என இந்தியாவுக்கான இஸ்ரேல்தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் 1,100 பேர் உயிரிழந்தனர். மேலும் இஸ்ரேலியர்கள் 240 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அவர்களை தேடும் பணியில்இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. காசா மீதான தாக்குதலை நிறுத்தினால், பிணைக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. ஆனால், காசா நகரில் தரை வழி தாக்குதல் நடத்தி அந்த நகரை சுற்றிவளைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.
இந்நிலையில் இந்தியாவுக் கான இஸ்ரேல் தூதர் நார் கிலான் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:
பகவான் ராமர் ராவண வதத்துக்குப் பிறகு நாடு திரும்பியதை ஒவ்வொரு தீபாவளியன்றும் மக்கள் விளக்கேற்றி கொண்டாடுகின்றனர். அதுபோல் இந்த தீபாவளிக்கு, இஸ்ரேல் பிணைக் கைதிகளும் நாடு திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் விளக்கேற்ற வேண்டும், அந்த போட்டோவை #DiyaofHope என்ற ஹேஸ்டேக்குடன் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT