Published : 27 Oct 2023 06:45 PM
Last Updated : 27 Oct 2023 06:45 PM

ஹமாஸ் மீது அமெரிக்கா பொருளாதார தடை; இஸ்ரேல் தாக்குதல் தொடர்வதால் கவலைக்குரிய நிலையில் காசா!

காசா: ஹமாஸ் தீவிரவாதக் குழு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடை இது. ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துகளையும், ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதமாக இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற போராளிக் குழுக்களை ஈரான் ஆதரிக்கிறது என்பது அமெரிக்காவின் நீண்ட காலக் குற்றச்சாட்டு. அதன்படி, இந்தக் குழுக்களுக்கு ஈரான் நிதியுதவி அளிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் ஹமாஸ் மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் புதிய தாக்குதல்: இதனிடையே, காசா நகரின் புறநகர் பகுதியான ஷிஜாயாவில் உள்ள ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தியதுடன், பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. நேற்று காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏவுகணை ஒன்று தாக்கியதில் மூன்று பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த ஏவுகணை தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது. காசா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. அரைமணி நேரத்தில் பல ஏவுகணைகள் வீசப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரம், டெல் அவிவ் நோக்கி ஏவப்பட்ட மற்ற எட்டு ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்ததாக அந்நாட்டின் சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு ஆபத்து: காசாவில் எரிபொருள் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் ஆபத்தில் உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள 12 பெரிய மருத்துவமனைகள் இயங்குவதற்கு தினமும் குறைந்தது 94,000 லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது. ஆனால், இங்கு எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் டயாலிசிஸ் தேவைப்படும் 1,000 நோயாளிகள், 2,000 புற்றுநோயாளிகள், தீவிர சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர்.

பாலஸ்தீனிய பிராந்தியத்துக்கான உலக சுகாதார நிறுவன பிரதிநிதி ரிச்சர்ட் பீபர்கார்ன் இதுகுறித்து பேசுகையில், "எரிபொருள் பற்றாக்குறையால் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியம் மோசமடைந்து வருகிறது. உலக நாடுகள் காசாவுக்கு எரிபொருள், உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களை தொடர்ந்து வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இதனிடையே, உணவு பற்றாக்குறையும் நிலவுவதால் காசா மக்கள் பசியால் வாடுகின்றனர் என உலக உணவுத் திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அபீர் எடெஃபா வேதனை தெரிவித்துள்ளார். “காசா அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறையால் போராடி வருகிறது. உணவும் தண்ணீரும் தீர்ந்து வருகின்றன. குறிப்பாக காசாவுக்கு வெளியே, மேற்குக் கரையில் ஒவ்வொரு நாளும் நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன. தூய்மைப் பணிகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் காலரா மற்றும் பிற நோய் தொற்று பரவும் அபாயமும் காசாவில் நிலவி வருகிறது என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது. இஸ்ரேல் தனது அடுத்தடுத்த நகர்வுகளை மிகத் துல்லியமாகவும், அதிக விழிப்புடனும் எடுத்து வைக்கிறது. இதனால், இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பு தங்களுடைய முக்கிய படைத் தளபதிகளை அடுத்தடுத்து இழந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இஸ்ரேல் உடனான போரில் ஹமாஸ் படையின் அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ், மற்றும் கலீல் டெத்தாரி ஆகிய மூன்று துணைத் தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹமாஸ் அமைப்பின் புலனாய்வு பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத்தை இஸ்ரேலி பாதுகாப்பு படை கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஷாதி பாரூத் இதற்கு முன்னர், கான் யூனிஸ் என்றப் பகுதியில் பட்டாலியன் குழுவை வழிநடத்தி வந்திருக்கிறார். அதோடு தீவரவாதக் குழுவின் உளவுத் துறை இயக்குநரகத்தில் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த பல திட்டங்களை வகுத்து கொடுக்க உதவியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இந்தப் போரில் இதுவரை இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 220 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் உள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதல்களில் இதுவரை காசாவில் 7,028 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x