Published : 27 Oct 2023 06:11 AM
Last Updated : 27 Oct 2023 06:11 AM

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை: கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை கத்தார்அரசு கடந்த ஆண்டு கைது செய்து சிறையில்அடைத்தது. இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக நேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக குறிப்பிட்டுள்ள அமைச்சகம், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை தொடர்புகொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்பது தொடர்பான சட்டப்பூர்வ வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஸ்த் ஆகியோருக்கும் முன்னாள் கமாண்டர்களான அமித் நாக்பால், புர்னெது திவாரி, சுகுனாகர் பாகலா, சஞ்சீவ் குப்தா ஆகியோருக்கும் ராகேஷ் என்பவருக்கும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இந்த 8 அதிகாரிகள் கத்தாரில் ‘தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டென்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனம் கத்தார் ராணுவத்துக்கு சேவைகளை வழங்கி வந்துள்ளது.

மேலும், இந்த நிறுவனம் கத்தார் கடற்படை தொடர்புடைய நீர்மூழ்கி கப்பல் திட்டம் ஒன்றில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலை கத்தார் இத்தாலிய நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வந்துள்ளது. இந்நிலையில், இந்த நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடர்பான ரகசிய விவரங்களை இந்த 8 அதிகாரிகள் இஸ்ரேல் அரசுடன் பகிர்ந்துகொண்டதாகவும் இதனால், கத்தார் அரசு இவர்களைக் கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்களது கைதுக்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்திய அரசு ஆலோசனை: இந்த 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளை கத்தார் அரசு கடந்த ஆண்டு கைது செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பலமுறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர். ஆனால், கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கவில்லை.

இந்த கைது நடவடிக்கை குறித்து கடந்தஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரம். கூடுதல் கவனம் செலுத்தப்படுவது அவசியம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக கத்தார் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் “கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள 8 இந்தியர்கள் மீதான தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. விரிவான தீர்ப்புவிவரங்களை எதிர்நோக்கியுள்ளோம். அவர்களின் குடும்பத்தார்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இவர்களை மீட்பது தொடர்பான சட்டவாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். இதுதொடர்பாக சட்ட வல்லுனர் குழுவுடன் கலந்தாலோசனை நடத்தப்படுகிறது. இதை முக்கியமான விவகாரமாக கருதி தீவிரமாக பின்தொடர்கிறோம். கத்தார் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x