Published : 17 Oct 2023 04:41 AM
Last Updated : 17 Oct 2023 04:41 AM

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதா? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு

ஜோ பைடன்

வாஷிங்டன்: ‘‘இஸ்ரேலில் கொடூர தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். அதேநேரம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது. இது மாபெரும் தவறாகிவிடும்’’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1967-ம் ஆண்டுக்கு முன்பு, பாலஸ்தீனத்தின் காசா பகுதி எகிப்தின்கட்டுப்பாட்டில் இருந்தது. 1967-ம் ஆண்டில்6 நாட்கள் நடந்த போரில், எகிப்திடம் இருந்து காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, கடந்த 2005-ம் ஆண்டு வரை இஸ்ரேல் நிர்வாகத்தின்கீழ் காசா இருந்தது. அதன்பிறகு, பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்துவிட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது.

தற்போது காசா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வடக்கு காசா பகுதியில் தரை வழியாக நுழைய இஸ்ரேல் வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இதனால், காசா பகுதியை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்கும் என்று முஸ்லிம் நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:

காசா பகுதியில் உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிஉள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்க கூடாது. இது மாபெரும் தவறாகிவிடும். இஸ்ரேலில் கொடூர தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். அதேநேரம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹமாஸ் தீவிரவாதிகள் - இஸ்ரேல் இடையிலான போர், மத்திய கிழக்கின் இதர பகுதிகளுக்கு பரவிவிட கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதற்கிடையே, லெபனான், சிரியா, கத்தார், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சூழலில், மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளை அமைதிப்படுத்தவே, இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பைடன் விரைவில் இஸ்ரேல் பயணம்: ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கிய காலத்தில், அதிபர் பைடன் உக்ரைனுக்கு நேரில் சென்று அந்த நாட்டு மக்களை உற்சாகப்படுத்தினார்.

அதேபோல, இப்போதைய சூழலில் இஸ்ரேலுக்கும் அவர் நேரில் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்கு ஏதுவாக, ஏற்கெனவே திட்டமிட்டிருந்த அவரது வெளிநாட்டு பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவரது இஸ்ரேல் பயண தேதி உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x