Published : 14 Jan 2018 09:37 AM
Last Updated : 14 Jan 2018 09:37 AM

இந்த ஆட்டம் யாருக்காக…?

அமெரிக்கா – வட கொரியா இடையில்தான் பிரச்சினை. இதில், சீனா – ஜப்பான் – தைவான் ஏன் வர வேண்டும்…? அதுதான் சர்வதேச சிக்கல்களுக்கு எல்லாம் காரணம். கடந்த சில பத்தாண்டுகளில், எல்லா நாட்டுப் பிரசினைகளிலும், தானாக வலிய உள்ளே நுழைவதை வல்லரசுகள் வழக்கமாகக் கொண்டு உள்ளன.

இந்தியாவின், குறிப்பாக ஜவகர்லால் நேரு, இந்திரா, மொரார்ஜி, வாஜ்பாய் போன்ற இந்தியப் பிரதமர்களின், ஆகச் சிறந்த ஆளுமை, இங்குதான் வெளிப்பட்டது. உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள், கொள்கை வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும், இந்திய இறையாண்மையைக் கட்டிக் காப்பதில், மேற்சொன்ன தலைவர்களிடம், அபாரமான மன உறுதி இருந்தது. இத்தனை தெளிவான சிந்தனை, அணுகுமுறை – துரதிருஷ்டவசமாக, பல நாடுகளில் காண முடிவதில்லை. இதனைத் தமக்கு சாதகம் ஆக்கிக் கொண்டு, பகடை ஆடுகின்றன வல்லரசுகள்.

ஈரான், இராக், குவைத், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர்….. வல்லரசுகள் குறி வைத்திருக்கிற நாடுகளின் பட்டியல் வெகு நீளமானது. இந்தப் பட்டியலில் வசமாக சிக்கிக் கொண்டவைதாம் – தென் கொரியா மற்றும் வட கொரியா. இந்த உண்மையை, வேறு எவரையும் விட, நன்கு அறிந்து வைத்து இருக்கிறார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

அதனால் சாதுர்யமான ராஜதந்திர நடவடிக்கையில் இறங்கினார் அபே. கிழக்கு சீனக் கடற்பகுதியில் நிலைமை மோசமாக இருந்தபோதே, 2014 நவம்பரில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, சீனத் தலைநகரில் சந்தித்து பேசினார் அபே.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2017 நவம்பர் 11 அன்று, வியட்னாமில், அபே - ஜின்பிங் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். இதற்கு ஒரு வாரம் முன்னதாக சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் வந்தார். அவருடன் ‘கோல்ஃப்’ விளையாடி தனிப்பட்ட உறவை வலுப்படுத்திக் கொண்டார்.

வியட்னாம் சந்திப்பு, சீனா – ஜப்பான் இடையே ஓர் இனிய அத்தியாயத்தின் தொடக்கம் என்றார் ஜின்பிங். ஆனாலும், அவரது பேச்சில், சீனாவுக்கே உரித்தான எகாதிபத்திய தொனி ஒலிக்கவே செய்தது. சீனா- ஜப்பான் இடையில் உள்ள பிரச்சினைகளே அதில் தலை தூக்கி இருந்தது. ஆனால் அபேவின் அணுகுமுறை, உலக நாடுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சீனா எழுப்பிய சச்சரவுப் பகுதிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து, தென் கொரியா – வட கொரியா இடையே பேச்சுவார்த்தை நடை பெற வேண்டும்; வட கொரியப் பிரச்சினையில் சீனாவின் அணுகுமுறை பொறுப்புள்ளதாக இருக்க வேண்டும் என்பதை நாசூக்காக நன்கு வெளிப்படுத்தினார்.

‘வட கொரியா - தென் கொரியா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிப் போய் இருந்த, நேரடிப் பேச்சுவார்த்தை, மீண்டும் தொடங்க வேண்டும்; அதற்கு சீனா முன்நின்று முயற்சி எடுக்க வேண்டும்’ என்பதே அபேவின் தீர்மானமான இலக்காக இருந்தது. விரைவிலேயே, அபேவின் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது.தொடரும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x