Published : 14 Oct 2023 04:19 PM
Last Updated : 14 Oct 2023 04:19 PM

இஸ்ரேல் ராணுவத் தாக்குதல்களில் இதுவரை காசாவில் 724 குழந்தைகள் உள்பட 2,215 பேர் பலி

இஸ்ரேலால் தாக்குதலுக்குள்ளான காசா

காசா: இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக இதுவரை 724 குழந்தைகள் உள்பட 2,215 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள ஹமாஸ் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் இந்தத் தொடர் தாக்குதலில் இதுவரை 724 குழந்தைகள், 458 பெண்கள் உள்பட 2,215 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 324 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் 8,714 பேர் காயமடைந்துள்ளனர்.

காசா நகரை விட்டு பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் நேற்று கெடு விதித்த நிலையில், பொதுமக்கள் பலரும் பல்வேறு வாகனங்கள் மூலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனிடையே, காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதலை தவிர்க்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும், ஹமாஸ் உள்ளிட்ட இஸ்லாமிய ஜிகாதி குழுக்களும் அங்கீகரித்திருப்பதாக இதற்கான முயற்சியை மேற்கொண்ட கத்தார் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இருந்து ரஃபா முனை வழியாக வெளிநாட்டவர்கள் எகிப்துக்குள் செல்வதற்கு எகிப்தும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் டாங்குகள் உள்ளிட்ட ராணுவ வாகனங்களை இஸ்ரேல் காசாவை ஒட்டிய எல்லையில் குவித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x