Published : 27 Dec 2017 10:45 AM
Last Updated : 27 Dec 2017 10:45 AM

உலக மசாலா: வரியிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு திருமணம்!

அமெரிக்காவைச் சேர்ந்த டேனி க்ராகெட் 2005-ம் ஆண்டு, அவரது வீட்டிலிருந்து காவலர்களால் மீட்கப்பட்டார். இருட்டறையில் துர்நாற்றத்தில் தலை கவிழ்ந்தபடி இருந்த டேனி, தன்னுடைய வாழ்க்கை யில் முதல்முறையாகச் சூரிய வெளிச்சத்தைக் கண்டார். அவரது அம்மா 7 ஆண்டுகளாக ஓர் அறையில் அடைத்து வைத்து, நீர் ஆகாரத்தை மட்டுமே வழங்கி வந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பெர்னி, டயானே தம்பதியர் டேனியலைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். “குழந்தை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தாள். தனிமையிலும் இருளிலும் இருந்ததால் மன அழுத்தம் இருந்தது. பேச்சு வரவில்லை. திட ஆகாரங்களை அவள் உண்டதில்லை. சுத்தமாக இருக்கத் தெரியவில்லை. மற்றவர்களுடன் பழகத் தெரியவில்லை. நாங்கள் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று மனதுக்கும் உடலுக்கும் சிகிச்சையளித்தோம். பேசுவதற்கான தெரபி கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமாகத் திட உணவுகளை அளித்தோம். பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுத்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் சூழ்நிலையால் ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. ஒருகட்டத்தில் என் மனைவியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விவாகரத்து செய்துவிட்டார். என்னால் டேனியை தனியாகக் கவனிக்க முடியவில்லை. ஒரு காப்பகத்தில் சேர்த்துவிட்டு, அடிக்கடி சென்று பார்க்கிறேன். இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறாள், பொம்மைகளுடன் விளையாடுகிறாள். 19-வது பிறந்தநாள் அன்று அவளை வெளியே அழைத்துச் சென்று, கேக், ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். என்னால் அன்பை மட்டும்தான் தாராளமாகத் தர முடிகிறது. ஒரு நல்ல குழந்தையை ஒரு மோசமான தாய் எப்படி மாற்றியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது” என்கிறார் பெர்னி.

பாவம் டேனி…

அயர்லாந்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் அல்ல. சொத்துவரியில் இருந்து விலக்கு வாங்குவதற்காகத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள்! டப்ளினைச் சேர்ந்தவர் மைக்கேல் ஓ சல்லிவன், அவரது நெருங்கிய நண்பர் மாட். இருவருக்கும் 30 ஆண்டுகால பழக்கம். இருவருமே 80 வயதில் இருக்கிறார்கள். ஓ சல்லிவன்தான் தற்போது மாட்டைக் கவனித்துக் கொள்கிறார். அதனால் அவருடைய வீட்டுக்கும் வீட்டில் உள்ள பொருட்களுக்கும் அவரே வாரிசாக இருக்க முடியும். ஆனால் அயர்லாந்தின் சட்டப்படி பரிசாகச் சொத்துகளை அளிக்கும்போது 33% வரி அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டியிருக்கும். அதுவே மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ சொத்துகளைக் கொடுக்கும்போது வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதனால் ஆண்களாக இருந்தாலும் திருமணம் செய்துகொண்டால், சொத்துகளை வரியின்றி இணைக்குக் கொடுக்க முடியும் என்பதால் இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். “எங்கள் இருவரின் மனைவிகளும் உயிருடன் இல்லை. குழந்தைகள் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பதால் ஒருவரை இன்னொருவர் கவனித்துக்கொள்கிறோம். என் மரணத்துக்குப் பிறகு என் நண்பனுக்கு இந்த வீட்டையும் பொருட்களையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன். இப்போது அயர்லாந்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. வரியிலிருந்து தப்புவதற்காகத்தான் இந்தத் திருமணம் ” என்கிறார் மாட்.

வரியிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு திருமணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x