Published : 14 Aug 2023 07:02 PM
Last Updated : 14 Aug 2023 07:02 PM

பறந்து கொண்டிருந்தபோது 3 நிமிடங்களில் 15,000 அடி கீழ் இறங்கிய அமெரிக்க விமானம்!

புளோரிடா: அமெரிக்க நாட்டில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று 3 நிமிடங்களில் சுமார் 15,000 அடி கீழ் இறங்கியுள்ளது. அதனால், அதில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அமெரிக்க நாட்டின் விமான நிறுவனம் இயக்கி வரும் விமானம் ஒன்று வட கரோலினாவின் சார்லோட் பகுதியில் இருந்து புளோரிடாவின் கெய்னெஸ்வில்லிக்கு கடந்த 10-ம் தேதி பயணித்துள்ளது. அப்போது அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென வெறும் மூன்றே நிமிடங்களில் சுமார் 15,000 அடி கீழ் இறங்கியுள்ளது. அதனால் அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் ஆக்ஸிஜன் மாஸ்க்கை அணிந்துள்ளனர். இந்த திகில் அனுபவத்தை அதில் பயணித்த பயணி ஒருவர் பகிர்ந்துள்ளார்.

“நான் ஆகாய மார்க்கமாக அதிகம் பயணித்துள்ளேன். ஆனால், இது திகிலூட்டும் வகையில் அமைந்திருந்தது. தக்க நேரத்தில் திறம்பட செயல்பட்ட அமெரிக்கன் ஏர் 5916 விமானத்தின் விமானி மற்றும் விமான குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏதோ ஒருவித கோளாறு காரணமாக இது நடந்துள்ளது” என அந்த பயணி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இருந்தும் அந்த விமானம் திட்டமிட்டபடி கெய்னெஸ்வில்லியில் அன்றைய தினம் பத்திரமாக தரையிறங்கி உள்ளது.

பீட்மாண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் அமெரிக்கன் ஈகிள் விமானம் 5916 பத்திரமாக தரையிறங்கியது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அழுத்தம் குறைந்ததற்கான அறிகுறியை அறிந்தனர். அதனால் பாதுகாப்பான உயரத்துக்கு இறங்க வேண்டி இருந்தது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என அந்த விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x