Published : 25 Nov 2017 12:16 PM
Last Updated : 25 Nov 2017 12:16 PM
எகிப்தின் சினாய் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 270 பேர் உயிரிழந்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள வெளியுறவுத்துறை விவகாரங்கள் அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ''எகிப்து மசூதியில் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தீவிரவாத நடவடிக்கையில் அப்பாவி உயிர்கள் பலியானது குறித்து இந்தியா கடுமையாக தனது கண்டனத்தை முன்வைக்கிறது.
துயரமான இந்த சூழ்நிலையில், இந்திய அரசும் மக்களும் எகிப்து மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பின் நிற்பர்.
தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலகளாவிய கொள்கைகளை வகுக்க இந்த சம்பவத்தை நினைவூட்டலாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
எகிப்தின் சினாய் பகுதியில் கடந்த 2013 முதல் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு பாதுகாப்பு படையினருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக உள்ள பொது மக்கள் மீதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சினாய் பகுதியின் பிர் அல்-அபெத் நகரில் உள்ள மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். லேசான காயமடைந்து வெளியே ஓடி வந்தவர்களை மசூதியை சூழ்ந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதல்களில் ஒட்டுமொத்தமாக 270 பேர் உயிரிழந்தனர். 109க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT