Published : 21 Oct 2017 09:44 AM
Last Updated : 21 Oct 2017 09:44 AM

11,000 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: இலங்கை அதிபரிடம் வலியுறுத்தல்

இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளாக உள்ள 11,000 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது 11,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு சிறைகளில் அரசியல் கைதிகளாக உள்ளனர். அந்த வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ராசதுரை திருவருள், மதியழகன், கணேசன் ஆகிய 3 அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள் தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு அண்மையில் சிங்கள பகுதியான அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து 3 பேரும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நேற்று 26-வது நாளாக தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

இதனிடையே அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழர் பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் பல்வேறு தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொழும்பில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது, அரசியல் கைதிகளாக உள்ள 11,000 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது.

இதற்குப் பதிலளித்த அதிபர் சிறிசேனா, நீதித் துறை அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார். அவர் கொழும்பு திரும்பிய பிறகு இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்றார். அதிபரின் பதிலில் தமிழர் அமைப்புகள் அதிருப்தி அடைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x