மன நிறைவு அடைந்த நாள் | என் மன வானில்

மன நிறைவு அடைந்த நாள் | என் மன வானில்
Updated on
2 min read

ஆசிரியரான தொடக்கக் காலத்தில் நான் 'ஒரு நல்ல ஆசிரியர்' என்கிற பிம்பம் எனக்குள் இருந்தது. ஒருநாள் ஒன்பதாம் வகுப்பில், பெற்றோரின் தியாகங்கள் பற்றிக் குறிப்பாக ஒற்றைப் பெற்றோராக வாழும் தாய்மார்களின் சிரமங்கள் பற்றியும் அதைப் பிள்ளைகள் உணர வேண்டும் என்றும் பேசிக்கொண்டிருந்தேன்.

ஒரு மாணவன் எழுந்து, "உண்மைதான் மிஸ், எங்க அம்மாவும் தனி ஆளா கஷ்டப்பட்டு என்னைப் படிக்க வைக்கிறாங்க. நான் அதை புரிஞ்சுக்காம அடிக்கடி கோவப்பட்டு அவங்களை கஷ்டப்படுத்துறேன். இனிமே அப்படிச் செய்ய மாட்டேன்" என்றான்.

எல்லோரும் கை தட்டினார்கள். சுற்றிலும் பார்த்தேன். அனைவரின் முகங்களும் மகிழ்ச்சியாக இருக்க ஒருவனது முகம் மட்டும் சோகமாக இருந்தது. நான் பார்ப்பதைக் கவனித்தவன், சட்டெனத் தலையைக் கவிழ்ந்தான். வகுப்பு முடியும்வரை தலை கவிழ்ந்தே இருந்தது. எனக்குச் சுருக்கெனக் குத்தியது. பள்ளி முடிந்ததும் அவனைச் சந்தித்தேன். மாதேஷ் சராசரியாகப் படிக்கும் அமைதியான மாணவன்.

நல்லாசிரியர் பிம்பம்

“மாதேஷ், நான் வகுப்பில் பேசியது பற்றி உனக்கு ஏதாவது கேட்கணுமா?”. என்னை நிமிர்ந்து பார்த்தவன் கண் களில் கண்ணீர். “எல்லோருக்கும் நல்ல அப்பா, அம்மா கிடைச்சிருக்காங்க. எனக்கு மட்டும் ஏன் மிஸ் இப்படி?” என்றான். மனம் அதிர்ந்தது. ஆறு மாதக் கருவாக தாயின் வயிற்றில் இருந்த போதே, அவனுடைய அப்பா ஒரு விபத்தில் தவறிப் போய்விட்டார்.

20 வயதில் கைக்குழந்தையோடு தனியே வாழ்வது சிரமம் என்று அவன் அம்மாவை சொந்தத்திலேயே ஒருவருக்குத் திருமணம் செய்து விட்டனர். குழந்தை தங்களோடு இருப்பதை கணவர் விரும்பாததால், பாட்டி வீட்டில் மாதேஷ் வளர்ந்து வருகிறான் என்றும் மகனை தன்னுடன் வைத்து வளர்க்க முடியாத சூழலுக்கு அவர் எவ்வளவு வருந்துகிறார் என்றும் அவன் அம்மா ஏற்கெனவே கூறியுள்ளார்.

மாதேஷ் தொடர்ந்து பேசினான். “அப்பா இறந்து போனாலோ, விட்டுட்டுப் போனாலோ மத்த அம்மாங்க தனியா வேலை பாத்து, அவங்க பிள்ளைங்கள நல்லாதானே பார்த்துக்கிறாங்க. என் அம்மா மட்டும் ஏன் வேற கல்யாணம் பண்ணிக் கிட்டாங்க? அவங்க வாழ்க்கைதான் முக்கியம்னு என்னை தாத்தா பாட்டி கிட்ட விட்டுட்டு போயிட்டாங்க இல்ல”, என்று அழுதான்.

நான் வகுப்பில் பேசியது ஒரு குழந்தையை எவ்வளவு காயப்படுத்தி உள்ளது என்பதை உணர்ந்ததும், என் ‘நல்ல ஆசிரியர்' பிம்பம் உடைந்து நொறுங்கியது. எதையும் பொதுமைப்படுத்திப் பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அன்று கற்றுக் கொண்டேன். அவனை ஆற்றுப்படுத்துவதற்குத் தொடர்ந்து உரை யாடினேன்.

சுயமாக முடிவெடுத்தல்

“மாதேஷ் உன் அம்மா ஒரு சராசரி பெண். திருமணமாகி ஆறு மாதங்களில் வயிற்றில் குழந்தையோடு கணவனை இழந்து, படிப்போ வேலையோ இல்லா மல் எப்படி வாழப் போகிறோம் என்கிற எண்ணமே அவரை உடைத்துப் போட்டிருக்கும். முடிவெடுக்கும் நிலையில் அவங்க இருந்திருக்க மாட்டாங்க.

உறவில் ஒருவர் மகளைக் கட்டிக்க முன்வந்ததும், குழந்தையை நாங்களே பார்த்துக்கிறோம்னு உன் தாத்தா பாட்டி சொல்லியிருப்பாங்க. இன்றுவரை அவங்க உன்னை நல்லா தானே பார்த்துக்குறாங்க?”.

“தாத்தா பாட்டியோட பாசத்துல குறை இல்ல மிஸ். அப்பாவும் இல்ல; அம்மாவோட பாசமும் எனக்கு கிடைக்கல. அவங் களை அம்மானு கூப்பிட இன்னொரு பையன் இருக்கான். ஆனா எனக்கு...? யாரும் இல்லையே மிஸ்!”, என்றான்.

துணிவு, பணிவு, அறிவு

“மாதேஷ்! கணவர் இறந்த பிறகு ஒரு பெண் கல்யாணம் செய்யணுமா வேண்டாமா என்பது அந்தப் பெண் எடுக்க வேண்டிய முடிவு. இந்தச் சமுதாயம் பெண்களைச் சிந்தித்து முடிவெடுக்க, தன் வாழ்க்கையைத் தன் விருப்பப்படி தேர்ந்தெடுக்க பெரும் பாலும் விடுவதில்லை.

தாத்தா, அப்பா, அண்ணன், தம்பி என ஓர் ஆண் எடுக்கும் முடிவை ஏற்கவேண்டிய கட்டாயத்தில்தான் பெண் இருக்கிறார். வெகு சில பெண்களே இந்தக் கட்டுகளை உடைத்து தனக்கான முடிவுகளை எடுக்கிறார்கள். இதெல்லாம் இப்ப உனக்குப் புரியாது. இன்னும் பத்து பதினைந்து வருஷம் ஆன பிறகு புரியும்.

அப்ப உன்னைச் சுற்றி இருக்கும் பெண்களுக்கு தன்னைப் பற்றிய முடிவு களைத் தானே எடுக்கும் சுதந்திரம் இருக்கான்னு யோசி. இப்போதைக்கு ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கோ; ‘உன்னால் மாற்றக்கூடியதை மாற்றும் துணிவும், மாற்ற முடியாததை ஏற்கும் பணிவும், இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளும் அறிவும், இந்த மூன்றும் உனக்கு இருந்தால் வாழ்க்கை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்” என்றேன்.

நான் பேசியது அவனுக்கு ஆறுத லாக இருந்தது என்பதை அவன் முகம் உணர்த்தியது. அதன் பின் பள்ளிக்காலம் முடியும்வரை அடிக்கடி சந்தித் தான். கல்லூரியில் படிக்கும்போதே, ‘உங்களைப் போல நானும் ஒரு ஆசிரியர் ஆகணும்' என்று வைராக்கி யத்தோடு படித்தான்.

இன்று அவன் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். மனைவி, பெண் குழந்தையோடு சமீபத்தில் என்னைச் சந்தித்தான். விடைபெறும் முன் அவன் கூறியது, “மிஸ் நீங்க சொல்லிக் கொடுத்த துணிவு, பணிவு, அறிவுதான் என்னை மகிழ்ச்சியாகவும், தலைநிமிர்ந்தும் வாழ வைச்சிருக்கு. என்னைச் சுற்றி இருக்கும் பெண்கள் சுதந்திரமா சிந்தித்து முடிவெடுக்கு றாங்க. நன்றி மிஸ்” என்றான். மனநிறைவுடன் வழி அனுப்பினேன்.

- கட்டுரையாளர்: ஆசிரியர் எழுத்தாளர்; anneflorenceammu@gmail.com

மன நிறைவு அடைந்த நாள் | என் மன வானில்
எத்தனை மாணவர்கள்! அத்தனை சம்பவங்கள்! - என் மன வானில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in