Last Updated : 18 Jan, 2023 06:10 AM

 

Published : 18 Jan 2023 06:10 AM
Last Updated : 18 Jan 2023 06:10 AM

அழித்துவிட்டு ஆயிரம் தடவை எழுதலாம்: சிலேட்டு போல புத்தகம், நோட்டுப்புத்தக புரட்சி

சென்னை புத்தக கண்காட்சியில் ஆர்வத்துடன் புத்தகம் தேர்வு செய்யும் மக்கள்.படங்கள்: டி.செல்வகுமார்

சென்னை: சிலேட்டு போல புத்தகம், நோட்டுப் புத்தகத்தில் புரட்சி நடைபெற்று வருகிறது. ஆம், சென்னை புத்தகக் காட்சியில் விற்பனையாகும் புத்தகம், நோட்டுப் புத்தகத்தில் எழுதியதை ஈரத்துணியால் அழித்துவிட்டு மீண்டும் எழுதலாம். ஒரு பக்கத்தில் மட்டும் எழுதியதை ஆயிரம் தடவை அழித்துவிட்டு எழுத முடியும்.

இந்த புத்தகம், நோட்டுப் புத்தகங்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருப்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது புத்தகக் காட்சி 2023 நடைபெற்று வருகிறது. இப்புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ள ஆயிரம் ஸ்டால்களுக்கு மக்கள் குடும்பத்துடன் வந்து தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் பாடப் புத்தகத்தைத் தாண்டி சிறு கதைகள், படங்களுடன்கூடிய புத்தகங்களை விரும்பு வாங்குகிறார்கள்.

இப்புத்தகக் காட்சியில் இந்தியா டுடே சார்பில் அமைக்கப்பட்டுள்ள Dream Ways என்ற புத்தக அரங்கு பலரையும் கவர்ந்துள்ளது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகம், நோட்டுப் புத்தகங்கள் சற்று வித்தியாசமானவை. இவற்றில் பாடங்களை மட்டுமல்லாமல் எதை வேண்டுமானாலும் எழுதலாம். அப்படி எழுதியதை படித்து முடித்துவிட்டாலோ, வேறு எதையாவது எழுத வேண்டும் என்றாலோ ஏற்கனவே எழுதியை ஈரத்துணியைக் கொண்டு அழித்துவிட்டு மீண்டும் அந்தப் பக்கத்தில் எழுதலாம்.

இதுகுறித்து அரங்கில் இருந்த விற்பனையாளர் கூறியதாவது: எங்கள் அரங்கில் விற்பனையாகும் குழந்தை களுக்கான புத்தகங்கள் வித்தியாசமானவை ஆகும். ஓவியப் புத்தகம், வரைபடம், இரட்டைக் கோடு, மூன்று கோடு, நான்கு கோடு போட்ட நோட்டு, கோடு போடாத நோட்டு, அறிவியல் புத்தகம், கணக்குப் புத்தகம் என 25 வகையான புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் உள்ளன.

ஒரு புத்தகத்தின் விலை ரூ.130. புத்தகக் காட்சியையொட்டி 50 சதவீதம் தள்ளுபடி தருகிறோம். இந்த புத்தகம், நோட்டுப் புத்தகங்களில் ஸ்கெச் பென், செல் பென், இங்க் பென் போன்ற எந்த பேனாவைக் கொண்டும் எழுதலாம். அவ்வாறு எழுதியதை ஈரத்துணியால் எப்போது வேண்டுமானாலும் அழித்துவிடலாம்.

ரெனால்ட் பென்னால் மட்டும் எழுதக்கூடாது. அப்படியே மறதியாக எழுதிவிட்டால் பாடிஸ்பிரே கொண்டு அந்த இடத்தில் ஸ்பிரே செய்துவிட்டு ஈரத்துணியால் அழித்துவிடலாம். மற்ற பேனாக்களைக் கொண்டு எழுதினால் ஈரத்துணியைக் கொண்டு மட்டும் எளிதாக அழித்துமுடியும்" என்றார்.

இதுபோன்ற புத்தகம், நோட்டுப் புத்தகங்களை அதிகளவில் பயன்படுத்தினால் புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் தயாரிப்பதற்காக மரங்கள் வெட்டப்படுவது குறையும். அத்துடன் சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும் என்கின்றனர் கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x