Last Updated : 18 Aug, 2022 06:10 AM

 

Published : 18 Aug 2022 06:10 AM
Last Updated : 18 Aug 2022 06:10 AM

தலைமை ஆசிரியர் பதிவேடுகள் பராமரிப்பு: கற்பித்தல் பணியை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதி

சென்னை: பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளை ஆசிரியர்களுக்கு பகிர்ந்து அளிப்பதால் கற்பித்தல் பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை என்று ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு, பணி முடிப்பு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆசிரியர்கள் தினமும் பராமரிக்கின்றனர். அத்துடன் வாரம் ஒருமுறையும், ஆண்டுக்கு ஒருமுறையும் என மொத்தம் 67 பதிவேடுகள் பள்ளிகளில் பராமரிக்கப்படுகின்றன.

கற்றல் இடைவெளி

கரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைக்க எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் 1, 2, 3 வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்கள் கூடுதலாக கல்வி உபகரணங்களை தயாரிப்பது மேலும் சுமையாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதற்காக பணத்தையும் செலவிட வேண்டியதிருப்பதாக குறை கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு ஆப்பிள் பற்றி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும்போது வரைபடம் தயாரிப்பதற்குப் பதிலாக கால் கிலோ அல்லது தேவையான அளவுக்கு ஆப்பிள் பழங்களை வாங்கிச் சென்றுகூட பாடம் நடத்துங்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுவதால், அந்த செலவும் கூடுதல் பணச் சுமையாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், "ஆசிரியர், மாணவர் வருகையை பதிவேட்டில் பதிவிடாமல், பள்ளிக் கல்வித்துறையின் செல்போன் செயலியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக மாணவர்கள் வருகையை செல்போன் செயலியில் பதிவிடுவது பெரும் சிரமமாக இருக்கிறது" என்று ஆசிரியர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இதனிடையே, ஆசிரியர் வருகைப் பதிவேடு, மாணவர்கள் வருகைப் பதிவேடு, பள்ளிக் கண்ணாடி, சேர்க்கைப் பதிவேடு, நீக்கல் பதிவேடு, சேர்க்கை-நீக்கல் பதிவேடு, மக்கள் தொகை கணக்குப் பதிவேடு, விழாக்கள் பதிவேடு, சுகாதாரப் பணியாளர் பதிவேடு, இல்லம் தேடிக் கல்வி பதிவேடு, பதிலி ஆசிரியர் பதிவேடு, புத்தகப் பூங்கொத்து பதிவேடு, கரோனா நிரந்த வழிகாட்டி நெறிமுறைகள் பதிவேடு, பெற்றோர் ஆசிரியர் கழகப் பதிவேடு, பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு, அன்னையர் குழுப் பதிவேடு உள்பட 67 பதிவேடுகளை தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் பதிவிட வேண்டியுள்ளது.

இதில், “தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டிய பதிவேடுகள்தான் எண்ணிக்கையில் அதிகம். அதனால் தலைமை ஆசிரியர்கள் பல பேர் தங்களுக்கான பதிவேட்டுப் பணிகளை மற்ற ஆசிரியர்களிடம் ஒப்படைப்பதால் அவர்களின் கற்பித்தல் பணியை முழுமையாக முடிக்க முடிவதில்லை" என்று பாதிக்கப்படும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஆசிரியர்கள் கூறியதாவது:

வாரம் ஒரு முறை பாடத்திட்டம் தயாரிக்கிறோம். இப்போது பாடக் குறிப்புகளை ஒவ்வொரு பாடத்திற்கும் தினமும் எழுத வேண்டியுள்ளது. பள்ளி தொடங்கிய பிறகு நோட்டுப் புத்தகங்கள் வராத நிலையில், ஆசிரியர்களே எழுத்துப் பயிற்சிக்காக நோட்டுகள் வாங்கிக் கொடுத்து அதில் எழுத்துப் பயிற்சி அளித்து வருகிறோம். இந்நிலையில் அரசும் கடந்த வாரம்தான் எழுத்துப் பயிற்சி நோட்டுகளை வழங்கியது. இப்போது எந்த நோட்டுகளைப் பராமரிப்பது" என்ற குழப்பம் நீடிக்கிறது.

அன்றாட பணி

தினமும் 3 பாடங்கள் நடத்துகிறோம் என்றால் அந்த பாடங்களுக்கான அனைத்து குழந்தைகளின் நோட்டுகளை திருத்த வேண்டும். எல்லா மாணவர்களின் வீட்டுப் பாடங்களை திருத்த வேண்டும். குழந்தைகளிடம் சொல்லி எழுதச் சொல்லும் டிக்டேசனை திருத்துகிறோம். மெல்லக் கற்கும் குழந்தைகளுக்கான நோட்டுகளை தனியாக திருத்த வேண்டியுள்ளது.

இப்படி எங்களுக்கே தொடர் பணி இருக்கும்போது தலைமை ஆசிரியர் தாம் பராமரிக்கும் பல பதிவேடுகளை எங்களுக்கு பிரித்து கொடுக்கின்றனர். இதுதான் கற்பித்தல் பணியில் சிரமம் ஏற்படுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் தொடர்பான ஆசிரியர்களின் குறைகள் பட்டியல் நீள்கிறது. இவற்றை அசாத்தியமாக செய்து வரும் ஆசிரியர்கள் கூறும்போது, “அரசு புதிதாக எந்த பதிவேட்டையும் தரவில்லை. சில பதிவேடுகளுக்குப் பதிலாக செல்போன் செயலியில் அதைச் செய்ய பணிக்கப்பட்டுள்ளது.

கற்பித்தல் பணியை மட்டும் செய்தால் கூடுதல் பணிச் சுமையோ, அரசு நல்ல சம்பளம் தரும் நிலையில் கற்பித்தல் பணிக்காக சில நூறு ரூபாய் செய்வதில் தப்பில்லை. எதிர்கால சந்ததியினருக்காக செய்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் கற்பித்தல் பணியைத் தொடர வேண்டும்" என்று தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x