Last Updated : 21 Aug, 2023 04:25 AM

 

Published : 21 Aug 2023 04:25 AM
Last Updated : 21 Aug 2023 04:25 AM

எட்டாம் வகுப்புக்கு எட்டா கனியா..?

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (NMMS- National Means Cum Merit Scholarship Scheme) தேர்வில் வெற்றி பெற்றால் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மொத்தம் ரூ.48 ஆயிரம் நிதி உதவி பெறலாம். இத்தேர்வு மாணவர்களுக்கு ஒன்றும் எட்டாக்கனி அல்ல.

மிகவும் ஆர்வமுடன் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திறனாய்வு தேர்வுகளை மத்திய மாநில அரசுகள் நடத்தி படிப்பு உதவித்தொகை அளித்து வருகின்றன.

படிப்பு உதவித்தொகை பெற தமிழகமாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத்தேர்வு (NTSE), தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் தேர்வு (NMMS), ஊரக திறனாய்வு தேர்வு (TRUST) என மூன்று வகையான தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இத் தேர்வை எழுதலாம். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் இத்தேர்வு நடைபெறும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏழாம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி.,பிரிவு மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தால் போதும். தேர்வு கட்டணம் ரூ.50. பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக விண்ணப்பித்து, அரசு அறிவிக்கும் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வை எழுத வேண்டும்.

நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கும் தமிழகத்தில் 6,695 மாணவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கும். ஒன்பதாம் வகுப்பில் இருந்து பிளஸ் டூ முடிக்கும் வரை உதவித்தொகை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ரூ. 12 ஆயிரம் மத்திய அரசின் சார்பில் வழங்குவார்கள்.

பாடத்திட்டம்: தேர்வுக்கு ஆறு முதல் எட்டாம் வகுப்பு கணக்கு, அறிவியல் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். ஒவ்வொரு தாளிலும் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். எஸ்சி. எஸ்டி, பிரிவை சார்ந்தவர்கள் 32 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி. இரண்டு தேர்வுகளும் அடுத்தடுத்து அரை மணி நேர இடைவெளியில் நடத்தப்படும். விடைகளை ஓஎம்ஆர் விடைத்தாளில் குறிக்க வேண்டும்.

ஊரக திறனாய்வு தேர்வு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும், தேசிய திறனாய்வு தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் நடத்தப்படுகிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு மேல்நிலைக் கல்வி, கல்லூரி படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும்.

போட்டித் தேர்வில் வெற்றி அடையதேவையான கூர் சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், சூழ்நிலை எதிர்கொள்ளும் திறன், நினைவாற்றல், உடனடி முடிவெடுக்கும் திறன், காரணம்காண் திறன், பகுத்தறியும் திறன் ஆகியவற்றை பள்ளிப் பருவத்தில் இருந்துதே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆயத்தமாகுங்கள்: படிப்பு உதவித்தொகை பெற தேர்வு, மேல்படிப்புக்கு நுழைவுத் தேர்வு, தகுதி தேர்வு, போட்டித் தேர்வு என பலவற்றை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இவற்றுக்கெல்லாம் அடித்தளமாக எட்டாம் வகுப்பு படிக்கும் போது முதலில் வரும் என். எம். எம். எஸ்., தேர்வு தான். இதில் OMR Sheet, பொது தேர்வு மையம் முறை அறிமுகமாகிறது.

அடுத்தாண்டு நடைபெறும் இத்தேர்விற்கு மாணவர்கள் இப்போது இருந்தே ஆயத்தமாக வேண்டும். என்.எம்.எம்.எஸ்.,தேர்வில் வெற்றி என்பது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எட்டா கனி அல்ல. எட்டி பறித்து உண்ணக்கூடிய கனிதான்.

- கட்டுரையாளர், ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி. அய்யம்பாளையம், திண்டுக்கல் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x