Last Updated : 03 Aug, 2023 04:25 AM

 

Published : 03 Aug 2023 04:25 AM
Last Updated : 03 Aug 2023 04:25 AM

சூழல் காப்பது மாணவர்கள் கடமை

நாம் வாழும் பூமி மனித இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல அனைத்து வகையான உயிரினங்களுக்கும் சொந்தமானதாகும். மற்ற உயிரினங்களை விட பூமிக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பது மனித இனம் மட்டும் தான். வருங்கால தலைமுறையும் பூமியில் அச்சுறுத்தல் இன்றி அனைத்து வளங்களும் பெற்று ஆரோக்கியமாக வாழ பூமியை காப்பது அனைவரின் கடமையாகும்.

பூமியை காக்கும் பணியை மாணவப் பருவத்திலிருந்து தொடங்க வேண்டும். பள்ளி, கல்லூரி அளவில் சுற்றுச்சூழல் மன்றங்கள், தேசிய பசுமைப்படை அமைப்புக்கள் மிக துடிப்புடன் முன்மாதிரியாக செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

தேசிய பசுமை படை: பள்ளிகளில் பாடம்சாரா செயல் பாடுகளில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய பசுமை படைக்கு மத்திய அரசு நிதி உதவியும் சுற்றுச்சூழல் மன்றத்திற்கு மாநில அரசு நிதி உதவியும் கிடைக்கிறது. சூழல் மன்றங்களில் 6 முதல் 9 வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 40 முதல்50 வரை இருக்கும். இவர்களை நீலக்குழு, பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், பழுப்பு குழு என பெயரிட்டு பிரிக்கின்றனர்.

நீலக்குழு நீர் மேலாண்மை சார்ந்தும், பச்சைக் குழு நில மேலாண்மை, ஆரஞ்சு குழு காற்று மேலாண்மை, மஞ்சள் குழு ஆற்றல் மேலாண்மை, பழுப்பு குழு கழிவு மேலாண்மை என வகைப்படுத்தப்பட்டு இவர்களுக்கான பணிகள் பிரித்து வழங்கப்படுகிறது. உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு வளாகப் பணி 40 மணி நேரம், பயிற்சிக்கு 30 மணி நேரம், சமுதாயப் பணி வளாகத்திற்கு வெளியே என மொத்தம் 120 மணி நேரம் இவர்கள் பங்களிப்பு செய்வதுடன் சுற்றுச்சூழல் முகாம்களிலும் கலந்து கொள்ள வேண்டும்.

அதிகரிக்கும் ஆபத்து: மனிதர்கள் தேவைக்கு தக்க படி பூமி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. மனிதனின் பேராசைக்காக புவியை மிக வேகமாக சுரண்டுவது ஏற்புடையதல்ல.

மழைநீர், மின்சாரம் சேமிப்பு, திட,திரவ கழிவு மேலாண்மை மற்றும் மக்கும் மக்கா குப்பை, மின்னணு கழிவு, விதைப்பந்து தயாரித்தல், மரக்கன்று நட்டு வளர்த்தல், நெகிழியின் பாதிப்புகள், துணிப்பை பயன்படுத்துதல், டீ காபி உள்ளிட்ட உணவுப்பொருட்களை பாலிதீன் பைகளில் வாங்கி வருதல். உள்ளிட்டவைகளில் விழிப்புடன் செயல்பட்டு பெற்றோர்களுக்கு சமூகத்திற்கும் வழி காட்டியாக இருக்க வேண்டும்.

விண்வெளி குப்பைகள்: கடந்த 15 ஆண்டுகளில் நெகிழி உற்பத்தி அபரிதமாக உயர்ந்துவிட்டது. நிலம், நீர் நிலைகள் மற்றும் கடலில் அதிக அளவில் பிளாஸ்டிக், நெகிழிகள் கலக்கின்றன. இதனால் மனிதர்களுக்கு மட்டுமின்றி நீர் வாழ் உயிரினங்களும் பெரும் ஆபத்தில் சிக்குகின்றன. பூமியில் மட்டுமின்றி விண்வெளியிலும் விண்வெளி குப்பைகள் அதிகரிக்கிறது. மலை சிகரங்களிலும் கூட குப்பைகள் பெருமளவு சேர்ந் துள்ளதை அறிகிறோம்.

பாலித்தீன் பைகளில் டீ, காபி: பெரும்பாலான கடைகளில் கொதிக்கும் டீ, காபியை பாலித்தீன் பைகளில் ஊற்றி கொடுக்கிறார்கள். இப்படியாக வாங்கி குடிப்பதன் மூலம்பல்வேறு வகையான கொடிய நோய்களுக்கு நாம் சிவப்பு கம்பளம் விரிக்கிறோம் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசு, காலநிலை மாற்றம் இப்பூமிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இது சார்ந்து அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுப்பது ஒரு பக்கம் இருந்தாலும் மாணவர்கள் இப்பூமிக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை எவ்வித சுணக்கமும் இல்லாமல் இணைந்து செய்ய முன்வர வேண்டும். இருக்கும் ஒரே பூமியை கெடுத்துவிட்டு நாம் வாழ வேறு கோள்களை தேடுவது நியாயமா?

ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சித்தையன் கோட்டை, ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x