

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று தொடங்கியது. மருத்துவ படிப்புக்குரிய அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இட ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
அதேபோல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். நாடு முழுவதும் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகளை நவம்பர் 15-ம் தேதி தொடங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் நேற்று தொடங்கியது.
பல கல்லூரி வளாகங்களில் சீனியர் மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றனர். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியதையடுத்து மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாணவர்களுக்கு மருத்துவர்களுக்கான உடை மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும். மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது. தேசிய மருந்து ஆணையத்தின் ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். ராகிங்கை தடுக்க பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது, ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்ததாக 2-ம் கட்ட கலந்தாய்வு இந்த வார இறுதியில் ஆன்லைனில் தொடங்கப்பட உள்ளது. இந்திய பல் மருத்துவ கவுன்சில் அறிவித்த பிறகு அரசு மற்றும் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும்.