Published : 03 Feb 2021 03:17 AM
Last Updated : 03 Feb 2021 03:17 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய செயற்கைக்கோள்கள்: உலக சாதனை முயற்சியாக பிப்.7-ல் விண்ணில் செலுத்தப்படுகிறது

மிகச்சிறிய செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்ட திருமால்பூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் குழுவினர். அடுத்த படம்: மாணவர்கள் தயாரித்த 50 கிராமுக்கும் எடை குறைவான செயற்கைக்கோள்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்த 4 மிகச்சிறிய செயற்கைக்கோள்கள் ராமேஸ்வரத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் நினைவாக ராமேஸ்வரத்தில் இருந்து சாதனை முயற்சியாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் மிகச்சிறிய அளவிலான 100 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் வரும் 7-ம் தேதி விண்ணில் செலுத் தப்படவுள்ளன. இதற்காக, ராணிப் பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் 40 பேர் இணைந்து, 4 மிகச்சிறிய செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளனர்.

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்டின் குரூப்ஸ் ஆகியோர் இணைந்து பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் 100 மிகச்சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி ஒரே நாளில் கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு ரெக்கார்டு, ஏசியா புக் ஆப் ரெக் கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு என 5 சாதனைகள் செய்யும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.

4 அரசு பள்ளி மாணவர்கள்

திருமால்பூர் அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சதீஷ் குமார் கூறும்போது, ‘‘அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் செயற் கைக்கோள் தயாரிப்பு, விண்வெளி துறையில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 1,000 மாணவர்களைக் கொண்டு 50 கிராமுக்கும் குறைவான எடையுள்ள மிகச்சிறிய 100 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ உள்ளனர். இந்த முயற்சியில், அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து திருமால்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பனப்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குருவராஜபாளையம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வளர்புரம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் இருந்து மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, செயற்கைக்கோள்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி ‘ஆன்லைன்’ மூலம் வழங்கப்பட்டது. ஒரு குழுவுக்கு 10 பேர் வீதம் நான்கு குழுவைச் சேர்ந்த 40 மாணவர்கள் சமீபத்தில் சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டு 4 சிறிய செயற்கைக்கோள் களை தயாரித்து ஒப்படைத் துள்ளனர்’’ என்றார்.

திட்டமிட்டபடி ராமேஸ்வரத்தில் வரும் 7-ம் தேதி காலை ஹீலியம் நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் 100 செயற்கைக்கோள்களையும் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தவுள் ளனர். 35 ஆயிரம் முதல் 38 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்கும் ராட்சத பலூன், சுமார் 8 மணி நேரம் பறந்து ஓசோன் படலத்தை அடைந்ததும் வெடிக்கும்.

அப்போது, பலூனில் கட்டப்பட்டுள்ள 100 செயற்கைக் கோள்களும் பாராசூட் மூலம் மீண்டும் கீழே வந்தடையும். பின்னர், செயற்கைக்கோள்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களை கணினியில் சேகரிக்கவுள்ளனர். செயற்கைக்கோள்கள் கீழே விழும் இடத்தை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவியையும் இணைத்து அனுப்ப உள்ளனர்.

மேலும் ஆசிரியர் சதீஷ்குமார் கூறும்போது, ‘‘இந்த செயற்கைக் கோள்கள் உதவியுடன் பூமியின் தட்பவெட்ப நிலை, கதிர்வீச்சு, ஓசோன் படலம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. ஒரு செயற் கைக்கோள் ரூ.1 லட்சம் செலவில் தயாரிக்கப்படுகிறது.

செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்காக மாணவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் செல்லவுள்ளனர்’’ என பெருமிதத்துடன் கூறினார்.

செயற்கைக்கோள் தயாரிப்பு குழுவில் இடம் பெற்ற திருமால்பூர் அரசுப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் சரண்குமார் கூறும்போது, ‘‘என்னுடைய சொந்த ஊர் கீழ்வெண்பாக்கம். பெற்றோர் நெசவுத் தொழில் செய்கின்றனர். செயற்கைக்கோள் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்றபோது என்னால் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நான் செயற்கைக்கோள் தயாரித்தேன் என்பதே பெருமை யாக இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x