Published : 21 Oct 2020 11:48 AM
Last Updated : 21 Oct 2020 11:48 AM

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் 700 மதிப்பெண் பெற்றது எப்படி? - கோவை மாணவி ஜி.தங்கம் விளக்கம்

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில், கோவையைச் சேர்ந்தமாணவி ஜி.தங்கம் 720-க்கு 700 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 91-வது இடத்தை பிடித்துள்ளார். இது குறித்து மாணவி ஜி.தங்கம் கூறியதாவது:

தந்தை என்.கணேசன் குழந்தைகள் நல மருத்துவராகவும், தாய் ஜி.சாந்தி மகளிர் நல மருத்துவராகவும் உள்ளனர். சகோதரர் ஜி.சிபி எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, மேற்படிப்புக்கு தயாராகிவருகிறார். பீளமேட்டில் வசித்துவரும் நான், தனியார் பள்ளியில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தேன். மருத்துவராகும் ஆசையில், பிளஸ் 1 படிக்கும்போதே, ‘நீட்’ தேர்வுக்குதயாரானேன். ‘பிட்ஜீ’ பயிற்சியாளர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து பயிற்சி அளித்தனர்.

பயிற்சியாளர்கள் ஒவ்வொரு பாடப்பகுதியையும் ‘நீட்’ தேர்வு கோணத்திலேயே பயிற்றுவித்ததோடு, தேர்வில் இடம் பெற வாய்ப்புள்ள பாடப்பகுதிகளையும் கூடுதலாகச் சொல்லிக் கொடுத்தனர். இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் ‘பிராப்ளம் சால்விங்’ தொடர்பான கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி அளித்தனர். ‘நீட்’ தேர்வு பாடத்திட்டத்தையொட்டி தயாரிக்கப்பட்ட புத்தகம் மூலமாகவும் பயிற்சி அளித்தனர். எனக்கு இயற்பியல் பாடம் மிகவும் பிடிக்கும் என்பதால், எளிதாக புரியும். இதனால் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தினேன். ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் வகுப்புகள் நடந்தன. தவிர, முந்தைய ‘நீட்’ தேர்வு வினாத்தாள்களைக் கொண்டும் பயிற்சி மேற்கொண்டேன்.

இதைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். தற்போது புதுச்சேரி ஜிப்மர்அல்லது கோவை அரசு மருத்துவகல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர திட்டமிட்டுள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x