Last Updated : 02 Jan, 2020 08:19 AM

 

Published : 02 Jan 2020 08:19 AM
Last Updated : 02 Jan 2020 08:19 AM

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நாட்களிலும் சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிகள் பட்டியல் சேகரிப்பு: நடவடிக்கை எடுக்க கல்வித் துறை தீவிரம்

சென்னை

உள்ளாட்சித் தேர்தல் நாளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 15,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 64 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். சுமார் 1.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நாட்களிலும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த டிச.23-ம் தேதிமுதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரி 4-ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. எனினும், திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்திவருகின்றன.

பாடத்திட்டத்தை முடித்து மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் நிலை இருப்பதால் மறுப்பு தெரிவிக்காமல் நாங்களும் பணிக்குச் செல்கிறோம்.

அதேநேரம் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்குமாறாக தேர்தல் நாளிலும் விடுப்பு தராமல் நிர்ப்பந்தம் செய்து பணிக்கு வரவழைத்தனர். இதனால் பல ஆசிரியர்கள் வாக்களிக்க முடியவில்லை.

விதிமுறையை பின்பற்றுவதில்லை

அரசின் விடுமுறை அறிவிப்புகளை தனியார் பள்ளிகள் கண்டுகொள்வதில்லை. அதிலும் சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு உத்தரவை மீறி கனமழை விடுமுறையின்போதும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, தமிழ்நாடு தனியார், மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தலைவர் நந்தக்குமார் கூறும்போது, ‘‘தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அரசின்வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இயங்குகின்றன. ஆனால், சில பள்ளிகள் செய்யும் தவறால் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் சிக்கலாகிறது. தேர்தல் நாளில்கூட பள்ளிகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால்அரசிடம் நியாயமான கோரிக்கைகளைகூட கேட்டுப் பெற முடியாத நிலை உள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் கல்வித் துறை விதிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தனியார் பள்ளிகள் விடுப்பு காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. தேர்தல் நாளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறி ஒவுறுத்தப்பட்டுள்ளது. இது சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். இதை மீறி தேர்தல் நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்திய பள்ளிகளின் விவரப் பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் உள்ள தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x