Published : 12 Dec 2019 12:53 PM
Last Updated : 12 Dec 2019 12:53 PM
நெருப்பு வளைய சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பாகப் பார்க்க, புதுச்சேரி பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் வரும் நிலவு, சூரியனை முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். பகுதி அளவு மறைத்தால் பகுதி சூரிய கிரகணம், சூரியனை முழுமையாக மறைக்காமல், சூரியனின் வெளி விளிம்புப் பகுதி ஒரு நெருப்பு வளையம் போல காட்சி அளித்தால், அது நெருப்பு வளைய சூரிய கிரகணம் (கங்கண சூரிய கிரகணம்) எனப்படுகிறது.
இதில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் வருகின்ற டிசம்பர் 26 அன்று நிகழ உள்ளது. இதைப் பாதுகாப்பாகப் பார்வையிடும் முறைகள் குறித்த செயல் விளக்கம், புதுச்சேரி நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பள்ளித் தலைமையாசிரியர் சங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்ற பொதுச்செயலாளர் அருண் நாகலிங்கம் மற்றும் அறிவியல் ஆலோசகர் ராமச்சந்திரன் கலந்துகொண்டனர். மேலும், வளைய வடிவ சூரிய கிரகணம் நடைபெறும் பாங்கு, எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பாக பார்க்கும் முறைகள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.
மாயக் கண்ணாடி, பந்துக் கண்ணாடி, நிலவின் முகம், நுண்ணிய சூரியக் குடும்பம், நிறமாலை மானி, சூரியக் கண்ணாடி ஆகிய உபகரணங்களை உருவாக்கி விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர். நிகழ்ச்சியைப் பட்டதாரி ஆசிரியர் ஜோசப், தனவந்தனி மற்றும் ஹேமலதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT