Published : 27 Nov 2019 07:40 AM
Last Updated : 27 Nov 2019 07:40 AM
தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையு ஆகிய 2 யூனியன் பிரதேசங்களை ஒன்றாக இணைக்கவகை செய்யும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தாத்ரா, நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையு 2019 (யூனியன் பிரதேசங்கள் இணைப்பு) மசோதாவை மத்திய உள் துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி நேற்று மக்களவையில் அறிமுகம் செய்தார். இதன்படி ஒன்றிணைந்த யூனியன் பிரதேசம், ‘தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையு’ என அழைக்கப்படும். தலைநகர் டாமன்-டையுவாக இருக்கும்.
நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில், குஜராத் அருகே அமைந்துள்ள இந்த 2 யூனியன் பிரதேசங்களுக்கும் இடையே வெறும் 35 கி.மீ. இடைவெளிதான் உள்ளது. இப்போது இதற்கென தனித்தனி செயலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன் பட்ஜெட்டும் தனித்தனியாக போட வேண்டி உள்ளது.
இந்நிலையில், பல்வேறு பணிகள் இரட்டிப்பாவதைத் தடுக்கவும் சிறப்பான நிர்வாகத்தை உறுதி செய்யவும் இந்த 2 யூனியன் பிரதேசங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இது கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7-லிருந்து 9 ஆக அதிகரித்தது. நாகர் ஹவேலி, டாமன் டையடு யூனியன் பிரதேசங்கள் இணைப்புக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை 8 ஆகக் குறையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT