Published : 22 Nov 2019 01:56 PM
Last Updated : 22 Nov 2019 01:56 PM
பெரும்பாலான இந்தியப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவே இருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழாவொன்றில் பேசிய அவர், ''இந்தியாவில் கல்வித்துறையை 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக 90 முதல் 95 சதவீதப் பள்ளிகள் அடிப்படை வசதிகளே இல்லாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.
அடுத்ததாக உள்ள 5 முதல் 10 சதவீதப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன. ஆனால், முறையான கல்வியை அவற்றால் அளிக்க முடிவதில்லை. மூன்றாவதாக 1 சதவீதம் பள்ளிகள் உள்ளன. அவை மட்டுமே உரிய வசதிகளையும் சரியான கல்வியையும் வழங்குகின்றன.
முதல் வகையான 90 முதல் 95 வகை பள்ளிகளில் குறைந்தபட்ச வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதே நமது கடமையாகும். நான் டெல்லி கல்வித்துறை அமைச்சராவதற்கு முன்பு, இங்குள்ள பள்ளிகள் வசதிகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தன. நாங்கள் குறைந்தபட்ச, அடிப்படை வசதிகளை அளித்தோம். இப்போது நல்ல கல்வியை வழங்குவதில் செயலாற்றி வருகிறோம்.
தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன. எனினும் அவற்றைச் செயல்படுத்த ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அதற்கு பள்ளிகளுக்கு நிதியுதவி தேவை.
இதற்காக கல்விக்கென அரசு, ஜிடிபியில் 6 சதவீதத்தை ஒதுக்கவேண்டும்'' என்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT