

உங்கள் மூளை ஒரு பெரிய நூலகம். மாதக்கணக்கில் படிக்கும்போது, ஆயிரக்கணக்கான புத்தகங்களை அதில் சேர்க்கிறீர்கள். தேர்வு என்பது 3 மணி நேரத்தில் சரியான புத்தகத்தைக் கண்டறிந்து, தேவையான தகவலை வெளியே எடுப்பது.
முதலில் படிக்கும்போது தகவல்கள் ஒழுங்கின்றிச் சேமிக்கப்படுகின்றன. தயாரிப்பின்போது அவற்றை ஒழுங்குபடுத்துகிறீர்கள். தேர்வின்போது உங்கள் மூளை கூகுள் தேடுபொறிபோலச் செயல்பட்டுச் சரியான பதிலை வெளியே எடுக்கிறது.
தேர்வு சோதிப்பது:
* கற்றல் - மூளையில் தகவல் நுழைந்ததா?
* புரிதல் - அர்த்தம் புரிந்ததா?
* நினைவாற்றல் - தேவைப்படும்போது எடுக்க முடியுமா?
முக்கிய நோக்கம்: விளையாட்டு வீரர்கள் தசைகளைப் பயிற்றுவிப்பதுபோல், வேகமாகச் சிந்திக்கவும், நினைவில் வைக்கவும், அழுத்தத்தில் செயல்படவும் தேர்வுகள் உங்கள் மூளையை பயிற்றுவிக்கின்றன.
வெற்றி உத்தி: உடல் ஆற்றல் இல்லாமல் மன ஆற்றல் இல்லை.
தேர்வுக்கு முன்:
* 7-8 மணி நேரம் தூங்குங்கள் - சோர்வான மனம் கவனம் செலுத்தாது.
* போதிய உணவும் நீரும் - மூளைக்கு எரிபொருள் தேவை.
* சுவாசப் பயிற்சி - நரம்புகளை அமைதிப்படுத்தி ஆக்ஸிஜனை அதிகரிக்கும்.
மனத் தயாரிப்பு: நேர்மறை மனப்பான்மையுடன் செல்லுங்கள். தேர்வை விளையாட்டுப் போட்டி போலக் கருதுங்கள். ஒவ்வொரு கேள்வியிலும் கவனம் செலுத்துங்கள், முடிவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
கடைசி நிமிடம்: புதிதாக எதையும் படிக்காதீர்கள், நண்பர்களுடன் விவாதிக்காதீர்கள் - இது குழப்பத்தையும் பீதியையும் உருவாக்கும்.
4 படி உத்தி:
முதல் படி - தெரிந்தவற்றை முதலில் எழுதுங்கள். பொதுவாக 10இல் 6-8 பாடங்கள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். முதலில் அவற்றை முடியுங்கள். இதனால் மதிப்பெண்கள் பாதுகாக்கப்படும், நம்பிக்கை வளரும், நேர அழுத்தம் குறையும்.
இரண்டாம் படி - கடினமானவற்றைத் தவிர்க்கவும் (சரியாக) ‘ஐயோ தெரியாது’ என்று நினைக்காதீர்கள். ‘நேர மேலாண்மைக்காகத் தவிர்க்கிறேன், திரும்பி வருவேன்’ என்று நினையுங்கள். நீங்கள் பலவீனமானவர் அல்ல, புத்திசாலி.
மூன்றாம் படி - உங்களை நீங்களே பாராட்டுங்கள். ஒவ்வொரு பதிலுக்குப் பிறகும் ‘நல்லது’, ‘இன்னொன்று முடிந்தது’ - இந்தச் சுய-ஊக்கம் மிகச் சக்திவாய்ந்தது.
நான்காம் படி - கடினமானவற்றைத் தாக்குங்கள். இப்போது மதிப்பெண்கள் போதுமான அளவு பாது காக்கப்பட்டுவிட்டன. இப்போது அதிக நேரம் உள்ளது, மனம் அமைதியாகிவிட்டது - சவால்களைச் சமாளிக்கச் சரியான நேரம். ஏன் இந்த வரிசை? தெரிந்தவற்றை முதலில் செய்தால் நிம்மதி, தெரியாதவற்றை முதலில் செய்தால் பீதி. எது வேண்டும்?
தேர்வுக்குப் பிறகு: ஒருபோதும் நண்பர்களுடனோ உங்களுடனோகூட விவாதிக்க வேண்டாம். உடனடியாக அடுத்த பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விவாதம் மன அழுத்தத்தை உருவாக்கும், தவறுகளை உணர வைக்கும், நம்பிக்கையை அழிக்கும். தேர்வு முடிந்தது, அந்த அத்தியாயம் மூடப்பட்டது.
செய்யக்கூடாதவை: இது பெற்றோர்க்கானது. ‘எவ்வளவு மதிப்பெண்?’, ‘எளிதா கடினமா?’, ‘என்ன எழுதினாய்?’, ‘தவறு செய்தாயா?’ எனக் கேட்காதீர்கள். ஏன்? இது அழுத்தத்தை உருவாக்கும், நம்பிக்கையை அழிக்கும், மாற்ற முடியாததைப் பற்றிக் கவலைப்பட வைக்கும்.
செய்ய வேண்டியவை: ‘நீ தேர்வை முடித்தாய் - அதுதான் முக்கியம்’, ‘உன்னுடைய சிறந்ததைக் கொடுத்ததில் பெருமை’ எனப் பாராட்டுங்கள். ‘அடுத்து எந்தப் பாடம்? தயாராவோம்’, ‘ஓய்வு எடுத்துவிட்டு நாளைய தலைப்புகளை மதிப்பாய்வு செய்வோம்’ என முன்னோக்கி நகர்த்துங்கள்.
மன அழுத்தம் இருந்தால் பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், நெருங்கிய வட்டத்துடன் நேரம் செலவிடுங்கள், ஓய்வு எடுங்கள். ஆனால், தவறுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம். தொந்தரவு செய்யும் நண்பர்களிடமிருந்து பாதுகாக்கவும். முடிந்த தேர்வைப் பற்றி விவாதிக்க விரும்பும் நண்பர்கள் நச்சு. உங்கள் குழந்தை மரியாதையுடன் அதைத் தவிர்க்க உதவுங்கள்.
ஊக்க முறை:
* தவறு: ‘கவலைப்படாதே, அடுத்த முறை நன்றாகச் செய்வாய்.’ (இது தோல்வியை உறுதிப்படுத்துகிறது).
* சரி: ‘அந்தத் தேர்வு முடிந்துவிட்டது. நீ சிறந்ததைக் கொடுத்தாய். இப்போது அடுத்த பாடத்தில் அதே முயற்சியைக் காட்டு. நான் உன்னை நம்புகிறேன்.’
நினைவில் கொள்ளுங்கள்: தேர்வுகள் தற்காலிக விளையாட்டுப் போட்டிகள். உங்கள் குழந்தையின் நம்பிக்கையும் மன அமைதியும் நிரந்தரப் பொக்கிஷங்கள். ஒன்றாக இணைந்து வெற்றிக்கான சரியான சூழலை நீங்கள் உருவாக்குகிறீர்கள்.
- ticf@indiacollegefinder.org