Published : 01 Nov 2021 02:51 PM
Last Updated : 01 Nov 2021 02:51 PM

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களை நேரில் சென்று வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் 

சென்னை

கிண்டி, மடுவின்கரை சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த மாணவச் செல்வங்களைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''மிக நீண்ட நாளைக்குப் பிறகு பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்பது அனைவரின் கடமை. எனவே, நாடாளுமன்ற, சட்டப்பேரவஒ உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் நேசமுடன் மாணவர்களை வரவேற்கத் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவச் செல்வங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று (1.11.2021) தமிழக முதல்வர் ஸ்டாலின் வேளச்சேரி மேம்பாலத்தைத் திறந்து வைத்து, பின்னர், மடுவின்கரை சென்னை மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்றார். அங்கு மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த மாணவச் செல்வங்களை முதல்வர் நேரில் சென்று, அன்புடன் வரவேற்று அவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி உரையாடினார்.

மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாடிய முதல்வர், கல்வியில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார், தலைமை ஆசிரியர் ஷியாமளா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x