Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

மாவட்டம்தோறும் உள்ள அரசுப் பள்ளிகளில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ’ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கிவைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். படம்: பு.க.பிரவீன்

சென்னை

‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை மாவட்டம்தோறும் அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவனம் சார்பில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற திட்டத்தின் தொடக்க விழா சென்னை தரமணியில் உள்ள மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான திட்டத்தை தொடங்கிவைத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

இந்த திட்டம், மாணவர்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நடப்பாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அடிப்படை அறிவியல் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அடுத்தகட்டமாக இந்த திட்டத்தை மாவட்டந்தோறும் அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தவும், அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியுடன் இணைத்து நடத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசும்போது, ‘‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் உலக சுகதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) பாரதிதாசன், எம்.எஸ். சுவாமிநாதன் நிறுவனத்தின் தலைவர் மதுரா சுவாமிநாதன், செயல் இயக்குநர் கே.எஸ்.முரளி மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x