Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM
பாதுகாப்புத் துறைக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் பயனுள்ளவகையில் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிய ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று சென்னை ஐஐஐடி 9-வது பட்டமளிப்பு விழாவில் டிஆர்டிஓ தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.
சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள ஐஐஐடி (டிசைன் மற்றும் மேனுபேக்சரிங்) உயர்கல்வி நிறுவனத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆட்சிமன்றக் குழு தலைவர் எஸ்.சடகோபன் தலைமை வகித்தார். ஐஐஐடி இயக்குநர் டிவிஎல்என் சோமயாஜுலு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
விழாவில், பிடெக், பிடெக் படிப்புடன் கூடிய எம்டெக், எம்டெக், பிஎச்டி படிப்புகளில் 293 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பிடெக்படிப்பில் மாணவர் மகேஷ் அருண்பிரசாத், பிடெக் படிப்புடன் கூடிய எம்டெக் படிப்பில் மாணவி எம்.கே.சஞ்சு விகாஷினி, எம்டெக் படிப்பில் மாணவி எஸ்.சுஜிதா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர். ஒட்டுமொத்த தங்கப்பதக்கம் (ஆல் ரவுண்டர்) மாணவி மதுவந்தி வத்சவுக்கு கிடைத்தது. அவர்கள் அனைவருக்கும் ஐஐஐடி இயக்குநர் டிவிஎல்என் சோமயாஜுலு பதக்கத்தை அணிவித்து பட்டத்தை வழங்கினார்.
முன்னதாக, பாதுகாப்பு மற்றும்ஆராய்ச்சி நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தலைவவரும், மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருமான (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) ஜி.சதீஷ் ரெட்டி காணொலி காட்சி வாயிலாக பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியுதவி திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை டிஆர்டிஓ நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், பாதுகாப்புத் துறைக்கு பயன்படும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதற்காக ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. பாதுகாப்புத் துறைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் உதவும் வகையிலான தொழில்நுட்பங்களை புதிய பொருட்களாக உருவாக்கும் நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி வரை நிதியுதவி அளிக்கவும் டிஆர்டிஓ தயாராக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT