Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு செப்.20-ல் தொடங்கும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

கணினி சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு கணினிவழியில் நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்றும் அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 16-ம் தேதி வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பத்துக்கான இணைய இணைப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. இதனால் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கணினி சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கும். தேர்வர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, 40 வயதைத் தாண்டிய பொதுப்பிரிவினரும், 45 வயது தாண்டிய இடஒதுக்கீட்டுப் பிரிவினரும் (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி) முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. வயது வரம்பு கட்டுப்பாடு கடந்த அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது. அப்போது, ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக பொறுப்புக்கு வந்துள்ள நிலையிலும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படாததால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x