Published : 01 Sep 2021 03:16 AM
Last Updated : 01 Sep 2021 03:16 AM

சென்னை பல்கலைக்கழகம் 7 வகையான எம்எல் தனி படிப்புகளை நடத்த தடை கோரி வழக்கு: யுஜிசி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் 7 வகையான எம்எல் தனி்ப்படிப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம், தமிழக அரசு, யுஜிசி மற்றும் அகில இந்திய பார் கவுன்சில் ஆகியவை 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்வித்துறை முனைவர் படிப்புகளையும், எம்எல் வகுப்புகளையும் நடத்தி வருகிறது. ஆனால் இதில் 7 வகையான எம்எல்தனிப்படிப்புகளை தொலைதூரக்கல்வி போல நடத்தி வருகிறது.

இந்த படிப்புகளில் 2020-21-ம் கல்வியாண்டில் 246 மாணவர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும்சேர்ந்துள்ளனர். மேலும் தொலைதூரக் கல்வி மூலமாக எல்எல்எம்படிப்பு முடித்தவர்களை சட்டக்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக அனுமதிக்கக்கூடாது எனஅகில இந்திய பார் கவுன்சில் 2012-ல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமாகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ பயிற்றுவிக்க பல்கலைக்கழக மானியக் குழுவும் ஏற்கெனவே தடை விதித்துள்ளது.

எனவே யுஜிசி மற்றும் பார் கவுன்சில் விதிகளுக்கு புறம்பாக சென்னை பல்கலைக்கழகம் 7 வகையான எம்எல் படிப்புகளை தனிப்படிப்புகளாக வழங்க தடைவிதிக்க வேண்டும். 2020-21-ம்ஆண்டுக்கான கட்டணத்தை திருப்பி கொடுக்கவும் பல்கலைக் கழகத்துக்கு உத்தரவிட வேண் டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி,நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் நேற்று நடந்தது. பின்னர் நீதிபதிகள், இது தொடர்பாக சென்னை பல்கலை., தமிழக அரசு, யுஜிசி, அகில இந்திய பார் கவுன்சில் ஆகியவை 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x