Published : 07 Aug 2021 03:01 PM
Last Updated : 07 Aug 2021 03:01 PM

சர்வதேச அளவில் 18 விண்கற்களைக் கண்டறிந்த நாரணாபுரம் அரசுப்பள்ளி ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸ், சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் திட்டத்தில் தமிழக ஆசிரியர்களுடன் இணைந்து 18 விண்கற்களைக் கண்டறிந்துள்ளார்.

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் திட்டமானது சர்வதேச அளவில் விண்கற்களைக் கண்டறிந்து, அவற்றை வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டமாகும். விண்கற்களால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணக்கிட்டு, தொடர்சியாகக் கண்காணிப்பது என்பது சவாலான பணியாகும்.

இதுவரை நாம் கண்டறிந்துள்ள புவியருகு விண்கற்கள் (Near Earth Asteroids) மிகவும் குறைவானவையே. இன்னும் நாம் கண்டுபிடிக்க வேண்டிய விண்கற்கள் ஏராளமாகவும், சிறியவை, பெரியவை எனப் பல்வேறு அளவுகளிலும் உள்ளன. அவற்றைக் கண்டறிவதை அறிவியலின் மீது ஆர்வமுள்ள மக்கள் அனைவரின் பங்கெடுப்புடன் மேற்கொள்ளும் செயல்முறைக்கு "மக்கள் அறிவியலாளர்கள் ஆய்வுகள் (Citizen Science Research)" என சர்வதேச அளவில் பெயரிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்திற்காக ஹவாயில் (Hawaii) உள்ள பான்-ஸ்டார்ஸ் -01 என்ற தொலைநோக்கி ஆண்டு முழுவதும் இரவு வானின் படங்களை எடுத்து வருகிறது. இப்படி எடுக்கப்படும் படங்களில், ஒரு பிரத்யேக மென்பொருள் உதவியுடன் விண்கற்களைக் கண்டறிய வேண்டும்.

அந்த வகையில் பெங்களுரை சேர்ந்த சிகுரு கோலேப் (Chiguru Colab) மூலமாக ஆசிரியர்களுக்கான சிறப்பு இணையவழிப் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில் சிறப்பாகப் பங்கேற்ற 23 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச விண்கற்கள் கண்டறிவதற்கான முகமையில் (International Asteroid Search Campaign) பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

கடந்த ஒரு மாதம் நடைபெற்ற இந்த முகமையின் மூலமாக 40 நகரும் வான்பொருட்களை கண்டறிந்தனர். அவற்றில் 18 வான்பொருட்கள் விண்கற்களாக இருப்பதற்குஅதிகமான வாய்ப்புகள் இருப்பது, விஞ்ஞானிகளால் உறுதி செய்யப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இவை மேலும் பல கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவை விண்கற்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், விண்கற்களைக் கண்டறிந்த ஆசிரியர்கள் அவற்றிற்குப் பெயர் வைக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அப்படிப் பங்கேற்பவர்களுக்கு சர்வதேச வானவியல் தேடல் கூடுகையின் மூலமாக மக்கள் அறிவியலாளர் எனப் பாராட்டப்பட்ட சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாடானது நாசா (NASA) பங்கேற்புடன் இணைந்து நடைபெறுவதாகும்.

சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் திட்டத்தில் பங்கேற்ற நாரணாபுரம் அரசுப்பள்ளி ஆசிரியருக்கு முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டுத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x