Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப்.30-க்குள் முடிக்க யுஜிசி உத்தரவு

நாடு முழுவதும் கரோனா பரவலால் கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்துமாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் மற்றும் தேர்வுகள்நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கல்வியாண்டுக்கான காலஅட்டவணை மற்றும்வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்விவரம்: கரோனா வைரஸ்பரவல் சூழலில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தும் விவகாரத்தில் கடந்தாண்டு வழங்கப்பட்ட வழிமுறைகளை கல்வி நிறுவனங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். அதேநேரம் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி அல்லது இணையவழியில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கட்டாயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

சிபிஎஸ்இ மற்றும் மாநில தேர்வு வாரியங்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 31-ம் தேதிக்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரிகள் முடிக்க வேண்டும். முதலாமாண்டு வகுப்புகள் அக்.1-ம் தேதிக்குள் தொடங்க வேண்டும். நடப்பு கல்விஆண்டு 2022 ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவுபெறும். அதற்குஏற்ப கல்வியாண்டு கால அட்டவணையை உயர் கல்வி நிறுவனங்கள் சூழலின் தீவிரம் பொறுத்து வடிவமைத்துக் கொள்ளலாம். கல்லூரிகளில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் அக்.31-ம் தேதிக்குள் விலகிவிட்டால் முழுக் கல்விக் கட்டணத்தையும் நிர்வாகம் வழங்க வேண்டும்.

கூடுதல் தகவல்களை யுஜிசியின் இணையதளத்தில் (www.ugc.ac.in) அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொறியியல்கல்லூரிகளுக்கான வழிகாட்டுநெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x