Published : 17 Jul 2021 07:59 PM
Last Updated : 17 Jul 2021 07:59 PM

அரசு தொடக்கப் பள்ளியில் 620 மாணவர்கள்; கிராம மக்கள் ஒன்றுகூடி பள்ளிக்குப் பாராட்டு விழா

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை 620 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுத்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு விழா நடத்தி மகிழ்ந்தனர்.

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கையில் புதுமையைப் புகுத்தி வருகின்றனர். பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 2017- 2018ஆம் ஆண்டு சுகாதாரமான கழிப்பிட வசதி, மின்னணுக் கல்வி, படைப்பாற்றல் திறன் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சிறந்த பள்ளிக்கான விருதை சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக இந்தப் பள்ளி பெற்றுள்ளது.

பிற கல்வி நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில், இந்தப் பள்ளியின் தரம், சுத்தம், கற்பித்தல் திறனில் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், 8 உதவி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 425 ஆக இருந்தது. நடப்பு ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை 620 ஆக அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளியில் அதிகப்படியான மாணவர் சேர்க்கை நடத்திச் சாதனை படைத்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை ஊர் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நடத்தினர்.

பள்ளியில் இன்று நடந்த பாராட்டு விழாவில், தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களைப் பொதுமக்கள் பாராட்டினர். ஊர் பொதுமக்கள் 600-வதாகப் பள்ளியில் சேர்ந்த மாணவரைக் கொண்டு, கேக் வெட்டிக் கொண்டாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x