Published : 19 Jun 2021 03:15 AM
Last Updated : 19 Jun 2021 03:15 AM

5 லட்சம் இலவச பாடப்புத்தகங்கள் வருகை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்குவதற்காக சுமார் 5 லட்சம் புத்தகங்கள் வரப்பெற்று, பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2021-2022-ம் கல்வியாண்டுக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக சுமார் 5 லட்சம் புத்தங்கள் வரப்பெற்றுள்ளன. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான புத்தங்கள் அந்தந்த வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும், 11 மற்றும் 12-ம் வகுப்பு புத்தகங்கள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கும் வந்துள்ளன.

இந்த புத்தகங்களை பள்ளி வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கான இலவச புத்தகங்கள் வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 19) சென்னையில் தொடங்கி வைக் கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்கள் விநியோகம் தொடங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x