Published : 02 Mar 2021 04:29 PM
Last Updated : 02 Mar 2021 04:29 PM
11 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மதிய உணவு, காலையில் பால் மீண்டும் வழங்கப்படுவதை நேரில் சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். அப்போது மதிய உணவையும் சாப்பிட்டுப் பார்த்தார்.
கரோனா தொற்று நாடெங்கும் தீவிரமாக பரவத் தொடங்கியதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. அதையடுத்து மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பெற்றோர்கள் அனுமதியுடன் சந்தேக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், பள்ளிக்கு வந்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று கல்வித்துறை அறிவித்தது.
கடந்த ஜனவரி 18-ல் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 9.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. அரை நாள்தான் பள்ளி என்பதால் அவர்களுக்கான உணவு தரப்படாமல் இருந்தது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருந்தது தொடர்பாக இந்து தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசையிடமும் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நடவடிக்கை எடுத்தார்.
11 மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டம் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று காலை முதல் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு பாலும் தரப்பட்டது.
அதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி, ஆனந்த் பிரகாஷ் மகேஸ்வரி ஆகியோருடன் நேரில் சென்று, புதுவை அருகே கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு வழங்குவதைப் பார்வையிட்டனர்.
அப்போது மதிய உணவைப் பெற்று, துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் அவரின் ஆலோசகர்கள் உண்டு பார்த்து, தரத்தையும் ஆய்வு செய்தனர். இருப்பில் உள்ள அரிசி மற்றும் பொருட்களைப் பார்த்தனர். சமையல் அறையை பார்த்துவிட்டு, அதைத் தூய்மையாக வைத்திருக்கவும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT