Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM
இளநிலை படிப்புகளில் 1, 2, 3-ம் ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவலால் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பருவத்தேர்வுகள் இணையவழியில் நடத்தப்பட்டன.
இதற்கிடையே முதுநிலை, இளநிலை படிப்புகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிச.7-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பிற ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: அனைத்துவித பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1, 2, 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த ஆசிரியர்கள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஆலோசித்து ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பரிந்துரை செய்துள்ளது. அரசின் ஒப்புதலுக்கு அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT